உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்றன் பொன்னுருவிற்
பாகத்தான் பூங்குழலும் பண்பு. (58)

இ-ள்: அந்தி வானத்தை யொத்த செம்மேனி யம்மானாகிய சிவபெருமானது சிவந்த உடையும் பொன்னார் மேனியனாகிய அவனது ஒருபாகத்தில் விளங்கும் உமையம்மையாரது கரிய கூந்தலும் ஒருங்கு கூடியிருத்தலின் தோற்றமானது, முழங்கி யெரியும் செறிந்த தீத்திரளும் திணிந்த கரிய இருளும் ஓரிடத்தே ஒருங்கு கூடியிருக்குமானால் அவற்றின் தோற்றத்தை ஒக்குமல்லவா? எ-று.

‘உடனிருந்தால்’ என்ற தொடர், அங்ஙனம் உடனிருத்தல் இயல்பன்றென உணர்த்தி நின்றது.

பண்புணர மாட்டேனான் நீயே பணித்துக்காண்
கண்புணரு நெற்றிக் கறைக்கண்டா— பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னிருவ மேல். (59)

இ-ள்: கண்விளங்கும் நெற்றியினையும் நஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றினையும் உடைய பெருமானே, இடபத்தினை ஊர்தியாக உடையவனே, நின் திருமேனியின் மேல் திருநீற்றினை யணிந்து கொள்வது பெண்ணொரு பாகமாகிய இடப்பாகத் திருவுருவமோ, அன்றித் திருமால் பொருந்திய வலப்பாகத் திருவுருவமோ இவ்விரண்டனுள் எவ்வுருவமோ என நின் திருமேனியின் இயல்பினை உணர வல்லேனல் லேன். நீயே பணித் தருள்வாயாக.