51
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே— மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி யன்று.
(60)
இ-ள்: ஒரு கையினையுடைய மிகப் பெரிய விலங்காகிய மதமிக்க யானையினது கரிய தோலினை உரித்துப் போர்த்த அப்பொழுது இறைவனது திருமேனியின் தோற்றமானது, மேலே விண்ணிடத்தே திரியும் மேகங்கள் யாவும் ஒருங்கு கூடி ஒப்பற்றதாகிய பொன்மலை போன்று உயர்ந்து தோன்றும் ஒளிப் பிழம்பினை மூடிப் புதைத்தால் [எவ்வாறிருக்குமோ] அத்தகைய தோற்றத்தினை ஒக்குமல்லவா?
அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன்— என்றுந்தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவ மேது.
(61)
இ-ள்: (இறைவன் உளன் என அறிந்தோர் சொல்லக் கேட்ட) அன்றும் நினது திருவுருவைக் காணாமலேயே நின் திருவடிக்கு ஆளாயினேன். (நினது திருவருள் விளக்கம் கைவரப்பெற்ற) இன்றும் நினது திருவுருவை முடியக் காண்கின்றிலேன், ‘எக்காலத்தும் நும் இறைவன் எவ்வுருவினன்’ என என்னை நோக்கி வினவுவார்க்கு யான் எங்ஙனம் விடை கூறுவேன்? எம்பெரு மானே, நினது திருவுருவந்தான் எத்தகைய வடிவினதோ? எத்தன்மையதோ? பணித்தருள்வாயாக. எ-று