58
உலக மக்கள் அன்பினால் ஊடியும் கூடியும் போகம் நுகர்தலாகிய இல்வாழ்க்கையினை இனிது நிகழ்த்துதற் பொருட்டு’ என அம்மையார் குறிப்பால் அறிவுறுத்தருளினாராயிற்று. திருமுருகாற்றுப்படையில் ‘ஒரு முகம் மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே’ என வருந் தொடர்க்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விளக்கமும் ‘தென்பாலு கந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்... பெண்பாலு கந்திலனேற் பேதாயிரு நிலத்தோர், விண்பாலியோகெய்தி வீடுவர் காண் சாழலோ’ என வரும் மேற்கோளும் இங்குக் கருதத்தக்கன.
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோங் கூற்றைப்— படிமேற்
குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவல முண்டோ எமக்கு.
(69)
இ-ள்: திருமுடிமேல் வளைந்த பிறையினை யணிந்தவனும் (ஞாயிறு, திங்கள், தீயென்னும்) மூன்று கண்களையுடையவனும் ஆகிய இறைவனுடைய நன்மை பொருந்திய திருவடிகளை யாம் எமது தலைமேற் கொண்டமையால் இனி (உயிரைக் கவரவரும்) கூற்றுவனைக் கண்டு சிறிதும் மதிக்கமாட்டோம்.(அடியார்களைக் கண்டால்) நிலத்தின் மீது வீழ்ந்து வணங்க வல்லோம் ஆகிய அடிமைத் திறத்தைப் பாராட்டி மேற்கொள்ளப் பெற்றோம். (இத்தன்மையினேமாகிய) எங்களுக்கு எத்தகைய துன்பமும் உள தாமோ (இல்லை) எ-று.
கொடுமதி — வளைவுடைய பிறைச்சந்திரன். இறைவன் திருவடி பிறவிப் பிணிக்கு மருந்தாகலின்