69
சிந்தையார்க்குள்ள செருக்குக்குக் காரணம் ஆட்செய்யப்பெற்ற இதுகொல் என இயைக்க. சிந்தையார்- மனம்; உவப்புப்பற்றி அஃறிணை உயர்திணையாயிற்று. செருக்கு - இறுமாப்பு; ஈண்டு இச்சொல் பெருமிதம் என்ற பொருளில் ஆளப் பெற்று அதற்குரிய காரணத்தினை யுணர்த்தியது. இதுகொலோ என்ற வினா இதுவே எனத் தேற்றப் பொருள்தந்து நின்றது. இறைவனுக்கு ஆட்படுவதென்பது அவனடியார்க்குக் தொண்டுபடுதலே யென்பதும் அத்தகைய திருத்தொண்டே சிவபத்தியுடையார் உள்ளத்திற்கு உயர்வும் உறுதியும் அளிப்பதென்பதும் இத்திருப்பாடலால் இனிது புலனாதல் காணலாம். ‘இறுமாந்திருப்பன் கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமானேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங்-கிறுமாந் திருப்பன்கொலோ’ எனவரும் திருப்பாட்டின் பொருள் இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.
செருக்கினால் வெற்பெடுத்த வெத்தனையோ திண்டோள்
அரக்கனையு முன்னின் றடர்த்த — திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.
(80)
இ-ள்: திருத்தகவிற்றாயபெருமைவாய்ந்த திருமால் பிரமன் என்னும் இருவருங்காண வியலாது அரற்றி முறையிட்டுத் துதிக்கவும் (அடியார்கள் அன்பினாற்கண்டு) மகிழ்ந்து துதிக்கவும் (தன்னடியார் பொருட்டுக்) கூற்றுவனையும் முன்னின்று உதைத்து வென்ற திருவடிகள், தன்மனத்தெழுந்த அகந்தையால் திருக்கயிலாய மலையினைப் பெயர்த்தெடுத்த எத்தனையோ பலவாகிய திண்ணிய தோள்களையுடைய