உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

வருந்துகின்றாள்” என ஆறுமுகத் தம்பிரானவர்கள் பொருள் கொண்டதாகச் சிவக்கவிமணியவர்கள் தமது பெரியபுராண வுரையிற் குறிப்பிட்டுள்ளார்கள், இங்ஙனம் பொருள் கொள்ளுமிடத்து ‘மின்’ என்பதற்கு ‘மின்னற்கொடிபோல்வாளாகிய என்மகள் எனப்பொருளுரைக்க. மின் என்பது எழுவாய். உரைக்கும் என்பது பயனிலை.

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடு மீண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல்—தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலு நெடிது, (83)

இ-ள்: மின்னலையொத்து மிளிரும் சிவந்த சடையினையுடைய சிவபெருமான் (தன் ஒரு பாகத்தில் விளங்கும் காத்தற் கடவுளாகிய) திருமாலுடன் இங்கு இசைந்து எழுந்தருளினால் அத்தோற்றம் காண்பார்க்கு எங்ஙனம் திகழும் எனக் கேட்பீராயின், தனக்குத்தானே யொப்பென விளங்கும் பொன்மலையும் நீலநிறம் வாய்ந்த மணிமலையும் ஒருங்கிசைந்து மிகவுயர்ந்து விளங்குந் தோற்றத்தை யொப்பதாகும். எ-று.

இறைவனும் திருமாலும் ஒருங்கு திகழுந் தோற்றம் பொன்மலையும் நீல மலையும் ஒருங்கிசைந்த தோற்றத்தை ஒக்கும் என்பது கருத்து.

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியு நேரே
கடி தாங் கடுஞ்சுடரும் போலுங்— கொடிதாக