பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நம் காலத்தில் பெரிய அரசாங்கம் ஒன்று செய்துவரக்கூடிய பணிகளில் பெரும்பாலானவை சந்திரகுப்தர் காலத்திலேயும் நடந்து வந்தன என்பது வியக்கத் தக்கதாம். பின்னர்ப் புகழோடு ஆண்ட பேரரசராகிய அக்பர் காலத்தில் இருந்ததைவிட அரசாங்கம் அப்பொழுது செம்மையாக இருந்தது என்று கூறப்பட்டிருக்கின்றது. பயிர்த்தொழிலுக்கு வேண்டிய வசதிகள் யாவும் செய்யப் பெற்றன. நிலங்களை அளந்து, தீர்வை விகிதங்கள் முறைப்படி தீர்மானிக்கப்பெற்றன. உணவுப் பொருள்கள், கடைகள், சந்தைகள், தொழிற்சாலைகள், மாட்டுப் பண்ணைகள், முதலியவைகளை யெல்லாம் அரசாங்கம் கண்காணித்து வந்தது. தானியங்களைக் குவித்துச் சேர்த்து வைத்துக்கொண்டு கொள்ளை இலாபம் பெறுவதும், உணவுப் பொருள்களில் கலப்புச் செய்வதும் தடை செய்யப் பெற்றன. வாணிகப் பொருள்களுக்கு வரிகள் வாங்கப் பெற்றன. சுகாதாரத்தைக் கவனிக்கவும், மருத்துவ நிலையங்களை அமைத்து நடத்தவும் தனிப் பிரிவுகள் இருந்தன. திக்கற்றவர், விதவைகள், நோயாளர், தொழில் செய்ய முடியாத உடற்குறையுள்ளவர்கள் முதலியவர்களுக்கு அரசாங்கம் உதவிநிதி அளித்து வந்தது. எதிர்பாராத பஞ்சம், பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களுக்கு உதவி புரிவதற்காக அரசாங்கம் ஆங்காங்கே தானியங்களைக் கொள்முதல் செய்து சேர்த்துவைத்திருந்தது.

நாடெங்கும் பெரிய நகரங்களில் நகராட்சி மன்றங்கள் நிறுவப் பெற்றன. அவற்றை முறைப்-