பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

விடா முயற்சி வெற்றிக்கு அடிப்படை என்னும் சீரிய கொள்கையைச் சிரமேற் கொண்டவர் அசோகர். மக்கள் எப்போதும் எறும்பைப் போல் உழைத்த வண்ணமாகவே இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். அவர் தம் கல்வெட்டுக்களில் முயற்சியின் சிறப்பைக் குறித்து வரைந்துள்ளார். அல்லும் பகலும் விழிப்போடிருந்து வேலை செய்வதே அவருக்கு மனநிறைவை அளித்தது.

அசோகர் பகைவருக்கும் அன்பு காட்டும் பண்புடையவர். கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான பகைவர்களைப் பழிவாங்கும் எண்ணமின்றி விடுதலை செய்தார். தம் அதிகாரிகளுக்கும் பகைவருக்குத் தீங்கு செய்யலாகாது என்று அறிவுரை கூறினார். எல்லைப்புற மக்கள் தமக்காகச் சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை என அறிக்கை வெளியிட்டமை இவ்வுண்மையைப் புலப்படுத்தும்.

அசோகர் ஒரு கலைப்பிரியர். விகாரங்களும் தூண்களும் அவர் காலத்தில் சிறப்பாகக் கட்டப்பட்டன, நாடகக் கலையும் நாட்டியக் கலையும் வளர்ச்சியடைய அசோகர் வேண்டிய ஏற்பாடுகளை விருப்புடன் புரிந்தார். பலவகைக் கலைஞர்களும் அவரது ஆட்சியில் ஆதரிக்கப்பட்டார்கள்.

இங்ஙனம் அருங்குணங்கள் பலவற்றுக்கும் உறைவிடமான அசோகரின் நீதியும் நேர்மையும் மிக்க ஆட்சியில் குடிமக்கள் எல்லாரும் வளமெல்லாம் நிறைந்து அமைதியும் பெற்று வாழ்ந்தார்கள். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெருகி இன்புற்று வாழ்ந்தார்கள்.