பக்கம்:அலைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 O லா. ச. ராமாமிருதம்


நினைப்பு அப்படியே கனவுள் நழுவியது.

அவனுக்குத் தலை தீபாவளி.

கீழே ஒரே அமர்க்களம்.

சுசி மாடிப்படி ஏறி வருகிறாள். ‘ண்க்ணக்' என மெட்டி ஒலிக்கிறது. மெதுவாய்ப் படுக்கையறைத் கதவு க்றீச்சிட்டுக் கொண்டு திறக்கிறது.

விடியிருட்டில் அவள் உருவக்கோடுகள் விளிம்பிடுகின்றன. புதுப் புடவை சலசலக்கிறது. பக்கத்தில் வந்து நிற்கிறாள்.

“சுசி!" அவள் கையைப் பிடித்து இழுக்கிறான். அவன் மேல் சாய்கிறாள். மெத்து மெத்தென அங்கங்கள் அழுத்துகின்றன.

"சுசி! சுசி!"

தாழ்ந்து, நீண்டதோர் கொக்கரிப்பு அவனுள் மருந்து ஊசிபோல ஏறி, கனவு கலைந்தது. உடலில் மின்சாரம் பாய்ந்து, நினைவு வெடுக்கென உதறிக்கொண்டது. பதறி எழுந்து விளக்கைப் போட்டான்.

சிரித்தபடி ஆண்டாளு எதிரே நின்றுகொண்டிருந்தாள். எண்ணெய் தேய்த்து ஸ்னானம் பண்ணி, கொடியிலிருந்து இழுத்து சுசியின் தலை தீபாவளிப் புடவையை உடுத்தியிருந்தாள். ஈரம் உலர அள்ளிச் சொருகிய கொண்டையில் சொகுசாய்ச் சூடிய பூச்சரம் தொங்கிச் சிரித்தது. பட்டுப் புடவையிலிருந்து பொன்வண்டின் மின்னிறங்கள் ‘டால்' அடித்துச் சிரித்தன. ரவிக்கையில் ஜிகினாப் பொட்டுக்கள் மினுக்கிச் சிரித்தன. கைவிரல்களிலிருந்து சொடுக்குகள் சிரித்துக்கொண்டு உதிர்ந்தன. கைவளையல்கள் குலுங்கிச் சிரித்தன. சிரிப்பு மணம் அவளைச் சூழ்ந்து கமழ்ந்தது. உலகத்தின் புளுகுகளை அம்பலப்படுத்தும் சிரிப்பின் தேவதையாக காஷியளித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/114&oldid=1288269" இலிருந்து மீள்விக்கப்பட்டது