118 O லா. ச. ராமாமிருதம்
யாக மறுபுறம் வந்து ஜலத்தில் இறங்கினான். அவனைக் கண்டு நடுநடுங்கி புனலும் சலசலத்தது.
அவள் அவனைக் கண்டாள், அவனது உள்ளம் துள்ளிய துள்ளலில், உடலைவிட்டே வெளி வந்துவிடும் போலிருந்தது. அவளுடைய கரங்கள் குவிந்து, தலைகுனிந்து வணங்கி நிமிர்ந்தது. அக்கண்களில், எள்ளளவும் சஞ்சலமேனும் இருக்க வேண்டுமே! அலைகளுக்கப்பால், சப்தமற்றுத் தூங்கும் கடல் நீலம் போல, தன்னுள் தானே நிறைந்து, அவள் உள்ளத்தே அமைதி அசைவற்று நின்றது. அவனது உடல் மறுபடியும் நடுங்கியது. அவளையோ, சாந்தமே கவசமாய்க் கவிந்திருந்தது.
"சூர்ய கதி உயர்ந்துவிட்டாற் போலும்!"-என்றான், ஏதாவது பேசியாக வேண்டுமே, அதற்காக, அவள் வாய் வார்த்தையில் சொரியும் தேனுக்கு ஏங்கி அலைவுற்றது மனம்.
'ஆம்’ என்னும் முறையில், அவள் தலையை அசைத்தாள்.
பேச மாட்டாளா? வாயில் கொழுக்கட்டையா?
"தண்டகாரண்யம் இங்கிருந்து இன்னும் எவ்வளவு தூரம்?”
“சுவாமி, நான் அறியேன். வேணுமானால், இங்கிருந்து கிழக்காய்ப் போனீர்களானால், ரிஷிகளின் யாகசாலை இருக்கிறது. அங்கே விசாரியுங்கள்-”
ஆச்சு, அத்துடன் பேச்சும் முடிந்தது. அவனது உள்ளம் வெள்ளையாயிருந்தால், பேச்சும் வெள்ளமாய் வரும். ஆனால், அதில்தான் கள்ளத்தனம் புகுந்துவிட்டதே!
அவள் ஈரச் சேலையுடன், நிறை குடத்தைத் தாங்கிய வண்ணம் - அக்ரஹாரத்துக்குப் போகவில்லை - அதோ தெரிந்த மூங்கிற் காட்டை நோக்கிச் சென்று, புதர்களிடை மறைந்தாள்.