பக்கம்:அலைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று


குவிந்த விரல்கள் வழியாக இழைகள் வழிந்தன. பாற்குடம் உடைந்தாற்போன்று சன்னதி முழுதும் பரவிய கோலத்தின் மையத்தில், தூய வெள்ளையில் அச்சிற்றுரு. ஒரு பிரும்மாண்டமான மலர் தளையவிழ்கையில் அதன் நடுமொட்டுப்போல் தோன்றிற்று. அங்கிருந்து நீண்டும் குறுகியும் இழைகள் பெருகி, பிசகாத வளைவுகளிலும் வட்டங்களிலும், நீள் கோடுகளிலும் வீசி, விசிறிப் படர்ந்து முடைந்து மேலும் மேலும் அடர்ந்தன. அத்தனை நெருக் கத்திலும் துளிக்கூடச் சிக்கலற்ற, தெளிவான அவற்றின் தனித்தனிக்கதிகளை வியந்து நின்றான். என் கோணங்களையும் சட்டங்களையும் கொண்டுகூட, இந்தக் கமான்களையும், சுழிகளையும், பாய்ச்சல்களையும், நுட்பமான சந்திப்புகளையும், பிரிவுகளையும் என்னால் அமைக்க முடியுமோ? இத்தனைக்கும் 'ப்ளான்கள்'தான் என் படிப்பு, என் பிழைப்பு.

அவள் நெஞ்சில் அக்கோடுகள் கீறுகையில் அவளையுமறியாது, கை நெஞ்சுக்குழியைத் தொட்டுக் கொண்டது. பீதி. இது கோலமல்ல; காடு. நள்ளிரவில் நிலவு நிழலில், இலைகளின் நெய்வில், விலங்குகளின் விழிகள். இலைமறைவில், இரையைச் சிந்திக்கும் குரூர விழிகள். என்ன சிந்திக்கின்றன? ஏன் சிந்திக்கின்றன? இந்த ராக்ஷஸக் காடு இப்படித் தன்னை கடை பரப்பி, தன்னைப் பார்ப்போரின் அந்தரங்கங்கள் தன் மேல் கவிழ, தான் மட்டும் தன் குடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/125&oldid=1166185" இலிருந்து மீள்விக்கப்பட்டது