பக்கம்:அலைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 O லா. ச ராமாமிருதம்

 முடிந்தது. அப்போ நான் எட்டாவது வகுப்பில் தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தேன்.

ஆசைக்கு ஒரு பெண் ; ஆஸ்திக்கொரு பிள்ளை.

ஒரு சமயம் பாடம் கேட்க நாங்கள் நாலைந்து பையன்கள் 'ஸார்' வீட்டுக்குப் போயிருந்தோம். ஆஸ்தியைப்பற்றி ஏதோ பேச்சு வந்தது. அவருடைய கள்ளப் புன்னகையில் ஒளி வீசிற்று. யாவும் கடந்த சிரிப்பும் கள்ளச் சிரிப்புத்தான்.

'என் ஆஸ்தியெல்லாம் என் குருவின் அருளில் என் சக்திக்கெட்டிய அளவுக்கு எனக்குக் கிட்டி நான் சொல்லிக் கொடுக்கும் இந்தப் படிப்புத்தான். இது என் பிள்ளைக்கு மாத்திரமல்ல; எல்லோருக்கும் பொதுச்சொத்து. பற்றிக் கொள்வது அவனவன் சமர்த்து. நேரமில்லை; ஆகையால் சுருக்க! சுருக்க!”

என்ன 'சுருக்க?' ஏன் 'சுருக்க?'

யார் கேட்பது?

ஸாரிடம் ஒரு விசேஷம். அவர் வகுப்பில் பையன்களின் கேள்விகள் இராது. அவர் பாடம் சொல்லிக்கொண்டே வருகையில், கயிற்று நுனியைத் தெரிந்தவன் பிடித்து இழுத்தால் அவிழும் முடிச்சுகள் போல் சந்தேகங்கள் தாமே தெளிந்துவிடும் அப்படியும் மீறி ஏதாவது கேட்டால் "உனக்கு இப்போதைக்கு அது தெரியவேண்டிய அவசியமில்லை?” என்று சொல்லிவிடுவார். அப்படியும் மடக்கினால் ஊமையாகி விடுவார்; முகம் ஒரு தினுசாய், கல்லாய் இறுகிவிடும். அவரைக் கேள்வி கேட்க மனம் அஞ்சும்.

என்னது 'சுருக்க?'

யார் கேட்பது?

இப்போ தெரிகிறது. கேள்விக்குப் பதில் அவர் புன்னகையில் எங்கள் கண்ணெதிரேயே ஒளிந்துகொண்டிருந்தது.

ஒருநாள் வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருக்கிறது. என் தகப்பனார் அன்று லீவு. அவர் க்ளாஸை ரங்கசாமி வாத்தியார் எடுத்துக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/134&oldid=1288522" இலிருந்து மீள்விக்கப்பட்டது