பக்கம்:அலைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 லா.சா.ராமாமிருதம்



கோவில் வெளிப்பிரகாரத்தில், நந்தவனத்தின் நடுவில் கிணறு. சுற்றி, முழங்கால் உயரத்துக்குப் புதர். பாம்பு பூச்சி வெடுக்கென்று பிடுங்கினாலும் தெரியாது.

கிணற்றில் அப்பொழுதுதான் தவலையைப் போட்டிருந்தேன்.

ரோட்டில் வைத்திருக்கும் சோடாக் கடைக்காரன், மேல் துண்டை இடுப்பிலும், கைகளைத் தோளிலும் கட்டிக் கொண்டு வெகு பயபத்தியுடன் வந்து நின்றான்.

"அம்மனுக்கு என் பேரிலே ஒரு அர்ச்சனை பண்ணுங்க..." என்றான்.

எனக்கு ஏன் இவர்களையெல்லாம் கண்டால் அருவருப்புத் தோன்றுகிறதோ தெரியவில்லை. இவர்களுடைய பக்தியும், அர்ச்சனைகளும், கைகளை உயரத் தலைக்குமேல் தூக்கிக் கொண்டு, தொந்தி சரிந்துக்கொண்டு, தொண்டை கிழிய இவர்கள் பாடும் தோத்திரங்களும்! தேவி இவர்களுடைய பக்தியையும் தோத்திரங்களையுமா விரும்புகிறாள்?

"செய்தால் போகிறது"-- என்றேன், தண்ணீரை இழுத்துக்கொண்டே.

"கொஞ்சம் அவசரங்க, பக்கத்தூரிலே இன்னிக்கு கோவலன்' நாடகம், சுருக்கப் போவனுங்க......"

எனக்குப் படபடவென்று கோபம் வந்துவிட்டது.

நான்--கோபி.

"உன் கூத்துக்கும் கொம்மாளத்துக்குமிடையில், சுவாமி கண்ணில் மண்ணைப்போட ஒரு அர்ச்சனையாக்கும்!”

நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமலே,

“இன்னிக்கு மாதவி ஸ்திரீ பார்ட்டுங்க; புதிசுங்க...” என்றான்.

“அப்படியானால் இப்பவே போ-வழியைவிட்டு எட்டி நில்......"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/16&oldid=1284270" இலிருந்து மீள்விக்கப்பட்டது