பக்கம்:அலைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 O லா. ச. ராமாமிருதம்



பிரகாசித்தன. எவ்வளவு தின்றும் குன்றா வானவெளியின் நீலத்தை, வெண் மேகங்கள் நிதானமாய் மேய்ந்து கொண்டு சென்றன. புள்ளினங்கள் காலையிலெழுந்து, குதூகலத்துடன் ஒன்றையென்று கூப்பிட்டுக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தன,

சோம சன்மா கீழேயிறங்கிக் காட்டினுள் புகுந்தான். தாவர வர்க்கங்கள் தலை குனிந்து, அந்தப் பிராம்மணோத்தமனை வரவேற்றன. காயும் பழமும் இலையும், கைக்கு மாத்திரம் அல்ல. நேரே வாய்க்கே எட்டும் உயரத்தில் கனத்துத் தொங்கின. தரையில் ஜமக்காளம் விரித்தது போல் பச்சைப் புல். அகத்துள் வீற்றிருக்கும் பெம்மானை அர்ச்சிக்கும் பூக்கள், பக்குவ மலர்ச்சியில் பறிக்கத்தான் காத்துக் கொண்டிருந்தன. தவத்துக்கும் சிந்தனைக்கும் இதைவிடச் செளக்கியமான இடம் ஏது?

இவ்வெண்ணம் மனதில் பாய்கையிலேயே, பின்னால் 'வீல்” என்று ஒர் அலறல்! சோம சன்மா திடுக்கிட்டுத் திரும்பினான். இரு புதர்களினிடையில் ஒரு பெண்ணின் உருவம் கரிமின்னல் போல் கண்ணில்பட்டு மறைந்தது. பின்னாலேயே அதைத் துரத்திக் கொண்டு ஒரு ஜந்து ஓடி வந்து, சோம சன்மனைப் பார்த்ததும் திகைத்து நின்றது.

சிக்குப் பிடித்துச் சடைசடையாய்த் தொங்கும் மயிர். அதைச் சுற்றிலும் குடலைக் குழப்பும் ஒரு துர்நாற்றம். தடித்துத் தொங்கும் உதடு. அதைத் தள்ளிக்கொண்டு கோரமாய் இளிக்கும் பற்கள். தீராத வேட்கைளின் மங்கிய சுடர் விட்டெறியும் கண்கள். மூச்சில் உலையனல் வீசிற்று, அதன் முற்றிய மூர்க்கத்தின் அடையாளமாய், நெற்றியில் இரு கொம்புகள் கொடி முடிச்சாய் முறுக்கிக் கொண்டிருந்தன. இதென்ன, மிருகமா அல்லது மிருக வேஷமெடுத்த அரக்கனா?

தவத்தைக் கலைக்க இம்மாதிரி ராஷசர்கள் வருவது வழக்கமாயிற்றே! சோம சன்மனுக்குக் கோபத்தில் கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/196&oldid=1290274" இலிருந்து மீள்விக்கப்பட்டது