பக்கம்:அலைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 209


"வரட்டும் வரட்டும் சிக்காமு வந்து என்னைத் தொடட்டும்.’

"என்ன கொளந்தையாட்டப் பேசறியே! ஆனால் என் நைனா சொல்லியிருக்குது இந்தத் தண்ணி பெரியவங்களையும் கொளந்தையா ஆக்கிடுமாம்-"

"அதுவும் சரி. உன்னை அது தாயாக்கிய பின், என்னைக் குழந்தையாக்க வேண்டியதுதானே!”

"சரி தாத்தா, நீ போவமாட்டியா, எனக்குப் பொழுது சாயுது நான் போய் வாரேன். "

"இல்லை குழந்தை, பொழுது உனக்கு இப்போதுதான் துவக்கம். பொழுது சாய்ந்தவன் நான். உன் ஆரம்பப்பசிக்கு பொழுது போதவில்லை. இன்னும் தேடி நீ போகிறாய். எனக்கோ இருக்கும்வரை உலகத்தின்போது அத்தனையும் என்னுடையதுதான். ஆகையால் அலையோரம் படுத்து, பொழுதை நான் அசை போடுகிறேன். நீ போய்வா அம்மா!"

போகிறாள், என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே. அவளுக்கு என்மேல் இன்னும் சந்தேகம்தான். சிக்காமு பேரோடு இல்லை, சந்தேகமும் உன் போல்தானோ? உனக்கும் அவளுக்கும் ஜாடை ஒற்றுமை துளிக்கூட இல்லை. ஆனால் இவள் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போகையில், எங்களிருவரிடையே தூரம் மிகுகையில், ஏனோ இவளில் உன்னைப் பொருத்திப் பார்க்கிறேன். அதோ கரை முகட்டில் மறைந்து போனாள். அவள் மறைந்த இடத்தில் அலை புரண்டு வந்து மோதி மூடுகின்றது. அவள் போன வழியில் விட்டுச் சென்ற அவள் அடிச் சுவடுகள், அலைகளின் கடைசலில் பளபளக்கும் பூமிக்குத் தம் கோர்வையில் தனிமாலையாய், அர்த்தமாய்த் துவள்கின்றன. ஒருவேளை அலைகளின் சேதியை சொல்லவே வந்து, சொன்னபின் வந்த வழியே மறைந்த கடல் தேவதையோ? அப்படியே சிக்காமு நீ திரும்பி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/211&oldid=1285547" இலிருந்து மீள்விக்கப்பட்டது