பக்கம்:அலைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 O லா. ச. ராமாமிருதம்


கொடுக்கப் போன இடமானாலும் சரி, பொழுதைக் கொல்லத் தானே போனவிடம் ஆனாலும் சரி. போன இடத்திலேயே ஐக்கியமாகி விடுவாள். திரும்பி வந்ததும் அம்மாவின் ஆயிரம் திட்டலுக்கும் மந்தமாய், ஊமையாய், நின்றவிடத்திலேயே நின்று கொண்டிருப்பாள். அங்கச்சி ஏன். எப்படி, இப்படி அத்தையாய் மாறிப்போனாள்?

அத்தையைத் திடீரென்று ஒரு நாள் பிற்பகலிலிருந்து கானோம். அது எங்கேயாவது, பக்கத்துத் தெருவில், அதுக்கென்று யாரேனும் தோழிவீட்டில் உறங்கிக் கிடக்கும் என்று அம்மாவுக்கு என்றைக்குமே அசுவாரஸ்யம்.

அப்பா அந்த சமயம் ஏதோ ஒரு புது 'பிஸினேஸ்' ஸில் இறங்கியிருந்தார். யாரைக் கவனிக்கவுமே அவருக்கு நேரமேது?

ஆனால் இரவு நேரமாகியும் அத்தை திரும்பவில்லை என்றதும்தான் அம்மாவுக்கே வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. அப்பாவுக்குச் சொல்லியனுப்பினாள். மூலைக்கொருவராய் அனைவரும் தேட, ஆரம்பித்து விட்டனர், அன்று ராமுழுக்க குழந்தைகள்-நாங்கள் கூடத் தூங்கவில்லை. விடியவே காத்திருந்தாற்போல் அண்டை அசலார் வீட்டுள் புகுந்து புறப்பட ஆரம்பித்து விட்டனர்.

"ஏண்டி கனகா, இப்படியும் உண்டோடி, நல்ல மரத்தில் புல்லுருவி யோடினமாதிரி?’’

ஏன் மாமி என்கிட்ட சொல்றேள்? எந்த இடியை எங்கள் தலையில் போடக் காத்திண்டிருக்காளோ மகராஜி தெரியல்லே. அப்பவே படிச்சுப் படிச்சு அவர்கிட்டே முட்டிண்டேன். குதிராட்டம் வீட்டில் வெச்சுக்க வேண்டாம். ஏர்றதோ தாழறதோ எதையோ ஒண்ணை முடிச்சுப் போட்டு கெளரவத்தைக் காப்பாத்திப்போம்னு. அது எங்கே மாமி வீட்டிலே அடைவா தங்கினால்தானே! காலில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/224&oldid=1285650" இலிருந்து மீள்விக்கப்பட்டது