224 O லா. ச. ராமாமிருதம்
“லஷிமி அப்பவே போயிட்டாளே!"
லஷிமி வேலைக்காரக் குட்டி.
"சீ, வாயை மூடு! ஒரு சமயம்போது கிடையாது. வயசு கடாமாதிரி ஆறது. ஏற்கெனவே வீடு கொழிக்கிறது கேட்க வேண்டாம்!'”
ஏதோ இருப்பதை விடாது கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதாய் அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு இப்போது தோன்றுவது குயுக்திதானோ என்னவோ? கொல்லைக் கதவை மூடிவிட்டால் வாசற்புறமாய் வந்தவளுக்கு வந்த வழியே போகத் தெரியாதோ? வருவதற்கு வழி வாசல், போவதற்குப் புழைக்கடை என்று எந்த சட்டத்தில் எழுதியிருக்கிறது? அம்மா யாரை ஏமாற்றுகிறாள்? என்னை யா, தன்னையேவா?
***
ஒருசமயம் நான் கிடந்த கிடக்கையாய்ப் படுத்து விட்டேன்.
டாக்டர் வருகிறார். டாக்டர் புட்டியிலிருந்து ஊசி வழி, ஊசிக் குழாயில் மருந்தைக் கறக்கிறார். மருந்தின் நீலம் குழாயில் நிறைகையில் நான் நீலத்தில் மூழ்குகிறேன்.
பிறகு எல்லாமே ஜலத்தில் மூழ்கியிருக்கையில், வெளியில் கேட்கும் அரவங்கள்.
வருவோர் வந்து படுக்கையண்டை நிற்கிறார்கள்.
அப்பா கவலையுடன் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறார்.
தலைமாட்டில் அம்மா, வாயில் முன்றானையைத் திணித்துக் கொண்டு கண்ணிர் உகுக்கிறாள்.
வாசலில் கார் நிற்கிறது, போகிறது.
வெள்ளையடித்த சுவரில் பதித்த வெள்ளைப் பீங்கான்கள் பளபளக்கின்றன.