226 O லா, ச. ராமாமிருதம்
மலர் மெத்தையுள், அதன் ஆழத்தில் அமிழ்கிறேன். என் கண்ணை மூடியவள் அவள்தானோ?
எவள்?
அறியேன். எங்கேயோ ஒரு ஜன்னல் திறந்து மூடுகிறது. எங்கிருந்தோ கவலையற்ற சிரிப்பின் இன்னொலி, கண்ணாடி சாமான்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் 'டிங்- டிங்..'
படுக்கையில் எழுந்து உட்காருகிறேன். வெளியே எட்டிப் பார்க்கிறேன். ஜன்னலின் கீழ் செடியில் ஒரு மலர்க் கொத்து, என் பக்கமாய்ச் சாய்ந்து சிரக்கம்பம் செய்கின்றது. திடீரென சப்தங்கள் அடங்கிவிடுகின்றன. அவள் என்னுடன் 'கண்ணாமூச்சி' விளையாடுகிறாள். என்னை அவளுக்குத் தெரியும். அதனால் அவளால் என்னை ஏமாற்ற முடிகிறது. இப்படி ஏமாறுவதும் இன்பமளிக்கிறது.
அவள் யார்?
உடல் திடீரென பரபரக்கின்றது. இதோ அவள் தன்னை எனக்கு வெளிப்படுத்திக் கொள்ளப் போகிறாள். வந்துகொண்டேயிருக்கும் விருந்தாளியின் பாதங்களைத் தாங்க, முன் ஒடும் ஜமக்காளச் சுருள் போன்று, என் நெஞ்சை ஒழித்துப் பெருக்கிக்கொண்டு அதனுள் இறங்கி சரசரவென விரியும் மோனத்தில் அவள் வருகையின் முன்னோசையை உணர்கிறேன். பரபரப்பு தாங்க முடியவில்லை. மார்பை இரு கைகளாலும் அழுத்திக் கொள்கிறேன்.
நிலைவாசலில் நிழல் தட்டுவதுபோல் ஒரு உணர்வு. கண்ணை மூடிக்கொள்கிறேன்.
நான் எழுந்து எதிர்கொண்டழைக்க மாட்டேன். எத்தனை நாளாய் இந்த சமயத்துக்கு ஏங்கியிருக்கிறேன்! அவளே உள்வந்து என்னை இப்படிக் காணட்டும்.
அவள் மூச்சு என் முகத்தில் மோதுகிறது. இந்த நிமிஷம் என் நரம்புகளில் ஏறியிருக்கும் முறுக்கில் மூச்சுப்பட்டால்