232 O லா. ச. ராமாமிருதம்
'
அவளைத் தேடித்தேடி திக்குத் தப்பி, அவளுக்காக ஏங்கித் தவித்து. தேய்ந்து கடைசியில் என்வழியில் எனக்குத் துணை யார் கிடைப்பினும் சரி அவரை, அவளாகக் காணத் தயாராகிவிட்டேன். எனக்கு இப்பொழுது வேண்டுவது அவள் கூட இல்லை. என் பிறப்புடன் என் விதியாய் என்னுடன் வந்திருக்கும் உள்ள எழுச்சி - அன்பு, பாசம், ஆத்திரம் அதை என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி. அதற்கு ஒரு வடிகால், ரூப உணர்வு கிட்டினால் போதும்.
ஆகையால், ஜாதகம் பொருந்தி நான் பார்க்கச் சென்ற முதல் பெண்ணையே வரித்துவிட்டேன். ஆகையால், பெண் என்னை நமஸ்கரித்து, என்னெதிரே வெகு நேரம் உட்கார்ந்திருந்தும் பாடியும் அவளை நான் சரியாய்ப் பார்த்தேன் எனச் சொல்வதற்கில்லை, அவளைப் பார்க்கு முன்பேயே, ஏற்கத் தீர்மானித்த பின், பார்த்தாலும் என்ன இருக்கிறது?
அம்மா தன் ஏமாற்றத்தை அங்கேயேகூட மறைக்க வில்லை. வீடு திரும்பியதும் கேட்கவும் வேணுமா?
"என்னடாது? தட்டிக் கழிக்க முடியாது தாஷண்யத்துக்குப் பார்க்கப் போனால், போன இடத்தில் பழத்தோல் வழுக்கின மாதிரி பல்டியடிச்சுட்டே? இதைவிட நல்ல பெண். இதைவிட வளத்துடன் உனக்குக் கிடைக்காதா?’’
அதற்குள் என் தம்பி குறுக்கிட்டு! “அம்மா, மன்னியோடு-”
“அது கெட்டுது போ! அதுக்குள்ளே நீ மன்னியுறவு கொண்டாடறது!"
“மன்னி பாடவேயில்லை. வாய்தான் அசைந்தது. அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளுக்குப் பின் குரல் கொடுத்தாளே அவள் தங்கை, குறுகுறுவென்றில்லை, பாடறப்போ, காதுலே டாலர் ஆடினதே ஒரு ஜோர்!”
“என்கிட்டே சொல்லி என்னப்பா பண்றது? உன் அண்ணன்தான் சொக்கி சுருள் பூரியா விழுத்துட்டானே! இதில்