கிரஹணம்
அவளுக்கு வரவே பிடிக்கவில்லை. “நான் இங்கேயே குழாயில் இரண்டு சொம்பு ஊற்றிக்கொண்டு விடுகிறேன். நீங்கள் போய் வாருங்கள்” என்றாள். ஆனால் அவர்தான் கேட்கவில்லை.
“சூரிய கிரஹணம் சும்மா வருவதில்லை. தம்பதி ஸ்னாநம் ரொம்பப் புண்ணியமாக்கும். உனக்கு என்ன தெரியும்?”
ஆம்; அவளுக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிய நியாயமுண்டு. இதுவரை இரண்டு மனைவியரை சமுத்திர ஸ்னாநத்திற்கு அழைத்துப் போயிருக்கிறார். இவள் மூன்றாமவள்.
சமுத்திரம் சீறினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்றும் அவளுக்குத் தெரியாது. அந்த சுழிப்பும். வெறியும் அவள் கற்பனையையும் மீறியது. அவள் பட்டிக்காட்டுப் பெண். அவள் ஊரில் ஒருகுளம் உண்டு. பட்டணத்திற்கு வந்த புதிதில், கடல், அக்குளத்தைப்போல் ஒரு ஆயிரம் குள அகலமிருக்கும் என்று நினைத்திருந்தாள்.
ஆயினும் இம்மாதிரி ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிவரை வியாபித்த இப்பெருவெகுளிக்கு அவள் ஒரு நாளும் தயாராயில்லை.
கடவுள் வகுத்த வரையை மீற இயலாது. ஆங்காரம் பிடித்த குழந்தை தன் ஆத்திரத்தைத் தன்மேலேயே