"தெறிகள் O 251"
அதுவரை அவன் உட்கொண்ட அவள் நெஞ்சின் உருக்கு, அவன் இதயத்துள் நஷத்திரம்போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அதன் ஒளியில் என் விழியோரங்கள் உறுத்துகின்றன.
3
இன்னொரு சமயம், இன்னொரு வீட்டில், இன்னொரு விசேஷத்துக்குப் போயிருந்தேன்.
நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு. அவர் செல்வனுக்குப் 'புதுமை’. வீடான வீடு! வீடா அது? அரண்மனை !
கிணற்றை ஒட்டிய சிமிட்டித் தொட்டியின் அகலமும் நீளமும் ஒரே சமயம் இந்தப் பக்கம் நாலு அந்தப்பக்கம் நாலு ஆக எட்டுக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டலாம். செட்டியார் வீட்டு விசேஷத்தில் கூட்டத்துக்குக் கேட்கணுமா? சம்பந்திகள், சிப்பந்திகள் , தெரிந்தவர்-தெரியாதவர், வருவோர்-போவோர், புகுந்து புறப்படுவோர்-ஒரே உற்சவந்தான்; கடல் பொங்கிற்று.
வந்திருப்பவர்களுள் ஒரு குழந்தை அத்தனை பேர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. வயது மூணு இருக்குமோ? நாலு இருக்குமோ? வேற்று முகம் இல்லை. யார், அழைத்தாலும் அழைத்தவரின் விரிந்த கரங்களிடையே சிரிப்புடன் சென்றான்.
தந்தப் பொம்மைப்போல் சிறு கூடாய், அதற்குள் அளவில் அமைந்த அவயவங்கள், அவையுள் முகத்தில் செதுக்கிய அங்க நயங்கள்.
குழந்தைக்குரியவர் அவனுக்கு 'கிருஷ்ண' அலங்காரம் பண்ணிவிட்டிருந்தார்கள். நெற்றியில் 'கோபி’, கோபியின் பாதத்தில் குங்குமப் பொட்டு. தலையில் முன் கொண்டை, அதில் சொருகிய மயிலிறகு இடையில் 'ஸேடின்' நிஜார்.