பக்கம்:அலைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 லா. சா. ராமாமிருதம்

 அவள் கைகள், அந்நூலிழை மூச்சையே தேடி, மூடி மூடித் திறந்தன. கண்ணிலும் வாயிலும் மூக்கிலும் அடைத்துக் கொண்டு உயிரையே குடிக்க முயன்ற ஜலத்தை உதற முயன்றாள், ஆனால் சமுத்திரம் அவள் அவஸ்தைக்கு இரக்கம் பார்க்கவில்லை. அதன் பெரும் கோஷம் ஒரு பெரும் சிரிப்பாயிருந்தது. அவளடியில் மணலைப் பறித்து அவளைத் தன் வழியே இழுத்தது. அப்படி அதன் வழியே உழன்று செல்கையில், சாவின் வழியே தான். ஆயிரம் மைல் போய் விட்டாற் போலிருந்தது. ஆனால் இம்மூச்சு?

மூச்சு! ஐயையோ ஒரு மூச்சே......

ஒரு யுகத்தின் முடிவில், தவிக்கும் கையில் ஒரு பிடி தட்டியது. தலையை முழுக்கிய அலை கழுத்தளவு வடிந்து சில்லென்று காற்று முகத்தில் மோதிற்று. இதென்ன பிரயாணம் முடிந்து . செத்தவர்களின் உலகத்திற்கு வந்து விட்டோமா? கண்ணைத் திறக்க முடிந்த பிறகு தான், தான் செத்துப் போய் விடவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. எந்த உலகத்தில் அவள் முழுகினாளோ அதே உலகத்தில்தான் முழுகியெழுந்திருக்கிறாள். சுற்று முற்றும் அதே ஜனங்கள் தாம் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தனர். அதே துணிகலைந்த மார்புகளும், ஆடை நெகிழ்ந்த இடைகளும், நாண மற்ற கொக்கரிப்பும் கூக்குரல்களும்.

{ஆனால் அவள் கையை அவள் கணவன் பிடித்து கொண்டிருக்கவில்லை. அவள் கி.டலும் உள்ளமும் பதறிற்று. முன்பின் அறியாத எவனோ பிடித்துக் கொண்டிருந்தான்.

அவன் தலையில் குட்டையாய் வெட்டிய மயிர் சிலிர்த்து நின்றது. புஜங்களும் மார்பும், அலையும் கடலில் குளிக்கும் பயிற்சியில் புடைத்துப் பூரித்திருந்தன. முகம் ரத்த ஓட்டத்தின் வேகத்தில் சிவப்பேறியிருந்தது. ஜலம் உடல் மேல் முத்து முத்தாய்த் துளித்து நின்றது. சிவந்த கண்களில் குறும்பொளி வீசிற்று, பென்சிலால் கீறியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/28&oldid=1284276" இலிருந்து மீள்விக்கப்பட்டது