பகல் கனவு
நாலு பேர் மாதிரி எனக்கு வாக்கு சாமர்த்தியம் போத வில்லை; ஒன்றுமில்லாததைச் சில பேர் எவ்வளவு ரசமாய், காது, கண், மூக்கு வைத்து 'ஜோடனை' பண்ணி, நேரில் நடப்பது போலவே சொல்லிக் காண்பித்து விடுகிறார்கள்! கேட்பவருக்கு மெய்சிலிர்த்து விடுகிறது.
எனக்கோ அதுதான் சூன்யமாயிருக்கிறது. மண்டையிலும் மனதிலுமிருக்கும் வேகத்தில், கால்பங்கு கூட வாய் வார்த்தையில் வரமாட்டேனென்கிறது. ஆனால், எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை என் மனவேதனை இன்னமும் தணியவில்லை.
ஒன்றுமில்லை. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.
ஆபீஸுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.
எங்கே போனாலென்ன, வந்தாலென்ன, அதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?
நான் என்னவோ சாதாரண மனிதன்தான். காலையிலெழுந்தால் காப்பி-அப்புறம் மார்க்கெட்-ரேஷன் அரிசி அதற்குமேல் அவசர அவசரமாய் ஆபீஸ்; திரும்பி வந்தா கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்குதல், வீட்டுக்கு வந்தால் நேரமாய் வந்தேனென்று வசவு வாங்குதல்- சாப்பிடுதல், தூங்குதல்-திருப்பித் திருப்பித் இதேதான். இதிலிருந்து தப்ப வழியில்லை. இந்த தினச்சூழலில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால், எனக்குத் திருப்திதான். ஆனால், எப்படி