பக்கம்:அலைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 O லா. ச. ராமாமிருதம்


மூன்று பெற்றிடினும் அவ்வாறுதான். கணவன் மனைவியுறவில் ஒரு கட்டத்தின் முடிவு; இன்னொன்றின் ஆரம்பம், அம்சங்களே மாறுகின்றன. ஒருவர் மற்றவரைப் பற்றித் தெரியப் பாக்கி ஏதுமில்லை. புதுமையின் வியப்பு மலர்ந்து, கசங்கி, இறக்கை விரித்து, ரகசியமிழந்து, இதழ்கள் உதிர்த்தாயிற்று. நாரின் மணத்தை நம்பிய நாட்கள் எவ்வரை நிஜத்தை நம்பியவை, பொய்யில் ஏமாந்தவை?

எனக்குத் தோன்றும் இதே எண்ணங்கள்தாம் அதோ அங்கே அவளுக்கும் தோன்றுகின்றன. இல்லேல் நான் இங்கேயும், அவள் அங்கேயுமாய், அவரவர் வழியில் ஏன் தனித்திருக்கிறோம்?

ண்ணெட்டிய வரையும் அப்பாலும் தண்டவாளம் எங்களைச் சிறையிட்டது. வான் கிண்ணமும் மூடி உள்ளே மாட்டிக் கொண்டோம். கிண்ணங்கள் ஒட்டிய இடம்விட்டுப் போகாமல் பட்டமிட்டாற்போல், தண்டவாளம் சுற்றி ஓடிற்று. வேளாவேளைக்கு வண்டிகள் பாரா வந்து போயின.

இதோ இன்னொன்று வருகிறது. இது பழைய நண்பன்.

ஆனால் இது இங்கு நிற்காது. பத்து வருடங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது. ஆயினும் அதிகாரிகள் கதிகளையும் நேரங்களையும் அப்போதைக்கப்போது மாற்றும் அட்டவணையில் இதற்கும் அவசரம் வந்துவிட்டது. தன் வயது முடியுமுன் தண்டவாளத்தின் முடிவு காணும் வேகத்தில் விரைகின்றது, இலுப்பந்தோப்பு வளைவில் அது வெளிப்பட்டதும் என்னையுமறியாமல் எழுந்து நிற்கிறேன். ஏன் இரும்புக் குதிரை என்கிறார்கள்? சிங்கம் என்றிடில் இன்னும் தகுமோ? சிங்கத்திலும் சிங்கம் கிழட்டுச் சிங்கம்! என்ன தான் சுமையை இழுக்க முடியாதபடி இழுத்து வந்தாலும், வயதின் புழுதி என்னதான் ஆழமாய்ப் படிந்தும், அதன் கம்பீரத்தை எது அடக்க முடியும்? அந்தச் சுமையும் புழுதியுமே கம்பீரத்தைப் பெருக்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/46&oldid=1285678" இலிருந்து மீள்விக்கப்பட்டது