பக்கம்:அலைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 95



‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி, தான் ஏற்கெனவே ஆண்டி, இன்னும் ஆண்டி ஆவது எப்படி, இனி அரசனாய்த் தான் ஆகணும்; ஒரு வேளை ஆறு பெற்றால் அரசனாவேனோ, தலைக்குமேல் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?’ என்கிற ரீதியில் இது மாதிரி வாய்க்கு வந்ததெல்லாம் பேச்சாய் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். அத்தனைக்கத்தனை வந்திருந்த விருந்தாளி சங்கோசி. தாகத்துக்கு ஒரு டம்ளர் தீர்த்தம் கேட்பதற்குள் முகம் மூணு தடவை மாறும்.

வீட்டில் கிணற்று ஜலம் உப்பு. குடிஜலம் ஊருக்கு ஒதுக்காகயிருக்கும் பிள்ளையார் கோவிலை ஒட்டிய குளத்திலிருந்துதான் காலையும் மாலையும் கொண்டு வரவேண்டும். அம்மாதான் ஆயிரம் வேலையோடு முக்கி முனகியபடி உசிரோடு உடம்பைக் கட்டி இழுத்துக்கொண்டு கொண்டு வருவாள். அவளுக்கு முடியாத சமயம்தான் நான் போவேன். என்னை வெளியில் அதிகமாய் அனுப்புவதில்லை. நான் மதமதவென வளர்ந்திருந்ததாலோ, ஊர் வாயில் அடிபடாமல் இருக்கவோ.

"ஒரு நாள் மாலை குடத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன். இந்த மாதிரி சமயங்களெல்லாம் எனக்கு அவிழ்த்துவிட்ட மாதிரியிருக்கும். வழியெல்லாம் ஒரு கல்லைப் பொறுக்கி இன்னொரு கல்லின்மேல் எறிந்துகொண்டு காலடியில் சுள்ளி இருந்தால் அது வழியிலிருந்து ஒதுங்கும் வரை, வழியெல்லாம் காலால் ஏற்றிக்கொண்டு, வேடிக்கை இல்லாவிட்டாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, -குடத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டு ஏதோ ஒன்று... கையும் காலும் சும்மாயிராது.

“இவர் எதிர்க் கரையில் உட்கார்ந்திருந்தார். அன்று ஒழிவோ என்னவோ? என்னைப் பார்த்ததும் முகம் சிவந்து, வெளுத்து, சிவந்தது. அதுவே எனக்குச் சிரிப்பாய் வந்தது. எனக்கப்போ விளையாட்டுப் புத்தி அதிகம்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/97&oldid=1288253" இலிருந்து மீள்விக்கப்பட்டது