122 ❖ லா. ச. ராமாமிர்தம்
“வாய்ச்சொல் கெளரவம்னு ஒண்ணு இருக்கேப்பா! தவிர, நான் வெகுளி. என் கணவரின் எல்லையற்ற பொறுமையும் உங்களைப் போலோரின் எல்லையற்ற அன்பும் தான் நான் இந்த அளவுக்கு என் இஷ்டத்துக்கு வளரக் காரணம். பொறுமைக் கடல்னா அவர்தான். எனக்கு அது முற்றிலும் பொருந்தாது. நான் வெகுளி, இப்பவும் அவரைக் கேளாமல்தான் வந்திருக்கேன். அவர் தடுக்கவில்லை. உங்கள் விஷயத்தில் தடுக்கமாட்டார். என் குழந்தைகளிடம் எப்போதுதான், எப்படித்தான் நான் இருக்கிறது அப்பா?”
அவள் குரல் நடுங்கிற்று. “அப்பா, நீங்கள் எல்லோரும் தெய்வத்தை உங்கள் தன்மையில்தான் படைத்திருக்கிறீர்கள். எனக்கும் ஏக்கம் உண்டு. கண்ணிர் உண்டு. அவருக்கு அதெல்லாம் இல்லை. அவருக்கு உருவமே இல்லை.”
சிரித்தாள். “வாங்கோ போகலாம்.”
குனிந்த தலை நிமிராமல், அகிலா கோலத்தில் முனைந்திருந்தாள். பெரிய தாமரை, அடுக்கடுக்கான இதழ்களின் சிக்கலான கோடுகள். விரல்கள் நுனியிலிருந்து கோலமாவு, தீர்மானமான வளைவுகளில் சொரிந்தது.
இந்த வயதிலும் அகிலா நிறம் குன்றவில்லை. அழகாயிருந்தாள். அது, கண்ணைப் பறிக்கும் ஒரு தினுசான வெளிறிச் சிவப்பு. வயதுக்கு மயிர் நரைக்கவில்லை. வங்கிக் கூந்தல், இன்று, எண்ணெய் ஸ்நானத்தில் சற்று புஸுபுஸு. தாடைகளில், கழுத்தில் இப்பத்தான் சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பட்டுப் புடவையிலிருந்தாள். வெள்ளிக்கிழமை அல்லவா!
கோலத்தின் வெளி ஓரங்களைச் சரிபண்ணிவிட்டு பார்வை திரும்புகையில் பூவின் மையத்தில் இரண்டு