பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலி ❖ 123


பாதங்கள் நின்றிருக்கக் கண்டாள். கண்கள் மெதுவாய் மேனோக்க...

யாரிந்தப் பொண்ணு? எப்படிக் கோலத்துள் வந்தாள்?

“என் பாதங்களுக்கு அளவெடுத்த மாதிரியே இருக்கே அம்மா!”

அகிலாவின் விழிகள் வட்டங்களாயின. எனக்கு இவள் மேல் ஏன் கோவம் வரல்லே? வந்தவளின் கண்கள் அவள் மேல் குனிந்து சிரிக்கையில் அகிலாவுக்கு என்னவோ பண்ணிற்று. (வயிறு திறந்துகொண்ட மாதிரி என்று சொல்லலாமா) கோலத்தில் சில கோடுகள் அழிந்திருந்தன.

அருகே கைகட்டி நின்ற குருக்கள் மேல் அவள் பார்வை திரும்பியது.

“அகிலா, இவள் நம்மோடு இருக்க வந்திருக்காள்.”

அகிலாவின் புருவங்கள் உயர்ந்தன. உடனே சமாதானப்படுத்துகிற மாதிரி, அவர், “இவள் கணவன் வீட்டிலிருந்து வந்திருக்காள்.”

“கோவிச்சுண்டா?”

குருக்கள் முகம் மாறிற்று. ஓ. இப்படியும் ஒரு கோணம் இருக்கா?

அவள் சிரித்தாள். “சுமாச்சுமா வந்திருக்கேன். ராத்ரி போயிடுவேன்.”

“ராத்ரி என்ன கணக்கு?”

“சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒரு பகலாகுமோன்னோ?”

அகிலாவுக்குப் புரியவில்லை.

“உள்ளே வா கண்ணு-இல்லே சத்தேயிரு, கோலத்தில் நிக்கறே. ஆரத்தி கரைச்சு கொண்டு வரேன்.”