பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலி ❖ 125


அடுப்பு மேடைமீது இறக்கி வைத்திருந்த வெண்கலப் பானையின்மேல் தட்டை எடுத்தவுடன்,

“ஆ, சக்கரைப் பொங்கல்! எனக்கு உசிராச்சே! அம்மா, அத்தனையும் எனக்குத்தானே?”

“ஆமாண்டி செல்லம், உனக்கேதான். வெள்ளிக்கிழமை, பெளர்ணமியாச்சே! நைவேத்தியத்துக்குப் பொங்கல் வெச்சேன். அப்பா ஸ்நானம் பண்ணிண்டிருக்கார். நிமிஷமாகக் கோவில் பூஜை பண்ணிட்டு வந்துடுவா-ஆ-என்னடி பண்ணறே?”

அவள் பொரிக்கப் பொரிக்கப் பொங்கலை விரலால் வழித்து வாயில் கப்பி, விரல்களைச் சப்பினாள்.

‘திக்’கென்றது. அகிலா குருக்களைத் தேடிச் சென்றாள். அவர் கிணற்றடியில் ஸந்தியாவந்தனம் பண்ணிக்கொண்டிருந்தார்.

“யார் இந்தப் பெண்? இவளை எங்கே பிடிச்சுண்டு வந்தேள்?”

“என்ன ஆச்சு?”

“நைவேத்யத்தை ருசி பார்த்து, எச்சில் பண்ணி வழிச்சு முழுங்கிண்டிருக்கா.”

“ஓ!” குருக்களுக்கு ப்ரமை பிடித்தாற்போல் ஸ்தம்பித்து, உடனே சிரித்துவிட்டார்.

“இதிலே என்ன சிரிக்கக் கண்டுட்டேள்?”

குருக்கள் சமாளித்துக்கொண்டு “இதோ பார் அகிலா பொறுத்துக்கோ. இன்னி சாயங்காலம் வரைக்கும்தான்.”

“இதென்ன ரெண்டுபேரும் சாயந்திரத்துக்குக் கண்டம் வெச்சிப் பேசறேள்! அவளை வெள்ளிக்கிழமை அதுவுமா யார் போகச் சொல்றா?”