பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலி ❖ 127


பற்றவில்லை. எண்ணெய்க் காப்பில் கருங்காலி சிற்பம் போலப் பளபளத்தாள்.

சுவரில் மாட்டியிருந்த படத்தெதிரே-அவள் நின்றாள்.

அகிலாவின் பட்டுப் புடவையில், கோடாலி முடிச்சிட்டுக் காடாய்ப் படர்ந்த கூந்தல், நெற்றியில் குழைத்துப் பட்டையாயிட்ட விபூதி (அவள் வீட்டுப் பழக்கமாம்) நடுவில் குங்குமம். அசைவற்ற சுடராய்த் தியானத்தில் நின்றாள்.

குத்துவிளக்குச் சுடர் அவளைக் கண்டு அஞ்சினாற் போல் பின்வாங்கி, முதுகு நெளிந்து ஆதரவு கண்டாற் போல நிமிர்ந்து பிதுங்கிற்று. உதடுகள் செதுக்கலில் அசலனமாய், மோவாய் நடுவே குழிவு. அகிலா அதிசயித்து நின்றாள். அறியாமல் கைகள் கூப்பிக் கொண்டன. பார்க்கப் பார்க்க இவளிடம் ஏதேதோ புதுப்புது அழகுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியே கல்லாகிவிட்டாளா? பயம் வந்துவிட்டது. “கமலா! கமலா!” அவள் தோளைத் தொட்டு அசைத்தாள்.

விழிகள் மெல்லத் திறந்து, அவளை அணைத்தன.

அகிலாவுக்கு நெஞ்சு விம்மிற்று. “என்ன அம்மா-?” அவள் அவளை அணைத்துக்கொண்டாள். அகிலா பொட்டென உடைந்துபோனாள். விக்கி விக்கி அழுதாள். இத்தனை நாள், தனக்குத்தானே ஒப்புக்கொள்ளாமல், தன்னுள் சிறை கிடந்த தாய்மையின் தவிப்போ? குருக்கள் இல்லை. கோவிலுக்குப் போயிருந்தார்.

அவர் கோவிலிலிருந்து திரும்பியபோது, அவர் முகம் ஒரு தினுசாக மஞ்சள் பூத்து வெளிறிட்டிருந்தது.

“என்ன ஆச்சு?”-அகிலா பதறிப் போனாள்.

அவர் உதடுகள் நடுங்கின. வாய், ஏதோ சொல்ல முயலும் முயற்சியில் தோற்றன.