பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உங்களுடன்

வெகுநாட்களுக்குப் பிறகு—

எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித் தானே உங்களுடன் நேரிடைப்பாவனையில் உரையாட முடியும்.

இந்தத் தொகுப்புடன் எழுத்துடன், என் அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான ஈடுபாட்டில் என் நினைவு தெரிந்த வரை, என்னிலிருந்து பிறந்த எல்லாச் சிறுகதை களும் வெளியாகிவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு முன் உத்தேச எண்ணிக்கையில் இருநூறு கூடத் தேறவில்லை. ஆனால் ஏமாற்றத்தினின்று உடனே தேறிவிட்டேன். ஏனெனில் ஐம்பத்து ஐந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இன்னும் பேசப்படுகின்றன. குறிப்பிடப்படுகின்றன. தொகுப்புகளில் சேர்க்கப்படு கின்றன. 'மண்' எழுதி அறுபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சமீபத்தில் இரண்டாம்முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபல ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது. முதன்முறை லண்டனில் வெளி வந்தது. இப்போது ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனிந்த மார்த் தட்டல்? இது ஒரு தகவல் தெரிவிப்பு என்று கொள்ள வேண்டுமேயன்றி என்னைப் பொறுத்தவரையில் எண்பத்து ஐந்து வயதில் என்னால் வேறு என்ன சொல்ல முடியும். எழுத்தின் வீச்சுக்குக் காலவரையேயில்லை என்று தெரிகிறது.