பக்கம்:அவள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 லா. ச. ராமாமிருதம்



ஜனனிக்கு இது கேட்டதோ? உட்கார்ந்துகொண்டே இருந்தாள். கண்களில் ஜலம் பெருகிய வண்ணம் இருந்தது.

எதிர் வீட்டுத் திண்ணையில் சில சமயங்கள் உபந்நியாசங்கள் நடக்கும்.

புராணிகர், கல்லால மரத்தடியில் சடையில் சூடிய பிறைச் சந்திரனிலிருந்து அமிர்த தாரை விடாது வழிந்து கொண்டிருக்க, சிப்பிமுத்துப் போன்ற வெண்மையான உடலுடன், தன்னைத்தானே தியானம் பண்ணினவனாய், தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் ஈசுவரனானவன்..." என்று சொல்வார்.

அல்லது --

'ஊசி முனையில் கட்டைவிரலை அழுத்தியவளாய், பர்வதராஜகுமாரி, பராசக்தி, அளகபாரம் ஜடாபாரமாக ஆகாரத்தைத் தள்ளிவிட்டு, ஜலபானங்கூடப் பண்ணாது, காற்றையே புசிப்பவளாய், பிறகு அதையும் நிராகரித் தவளாய், சந்திரசூடனுடைய தியானத்தையே ஆகார மாய்க் கொண்டவளாய் மஹா தபஸ்வியாய்..."

***

திடீரென ஒருநாள் ஐயருக்குக் கடிதம் வந்தது. அதைப் பிரித்துவிட்டு ஐயர் ஆச்சரியத்தாலும், எதிர்பாராது நேரும் சந்தோஷத்தைத் தாங்காத உணர்ச்சியாலும், உடலும் குரலும் நடுங்க, கூடத்துக்கு ஒடி வந்தார்,

'அடியே, குழந்தை எங்கே? அம்பாள் கண்ணைத் திறந்துட்டாடி! மாப்பிள்ளைப் பையன் அடுத்த வாரம் வராண்டி!- அவர் கண்களில் கண்ணிர் பெருகியது. முகமாறுதலின்றி ஜனனி சமாசாரத்தை ஏற்றாள். அவள் மனத்தில் என்ன ஒடியது என யார் கண்டார்? அவளே கண்டாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/196&oldid=1496582" இலிருந்து மீள்விக்கப்பட்டது