பக்கம்:அவள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 லா. ச. ராமாமிருதம்


இப்போது ராதை எனக்குச் சொந்தமில்லை. அவள் தன் குழந்தைகளின் தாய். அவர்களுக்குச் சொந்தம்.

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. நேரே என் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டேன். இடுப்பின் ஈரத்தைக் களையாமலே நாற்காலியில் சாய்ந்தேன். உடலில் ஒரு தினுசான ஓய்ச்சல். என்னை மங்கிய இருள் சூழ்ந்தது. என்றுமே என் அறையில் வெளிச்சம் மட்டுத்தான். இந்தச் சமயம் எனக்கு இந்த இருள் வேண்டியிருந்தது. என்னையே எனக்குப் பார்க்க விருப்பம் இல்லாத சமயம் இது. இருளின் இதவு உடல் மேலேயே உணரும் சமயம் இது. இருளுக்கும் எனக்கும் என்றுமே இணைப்பு உண்டு. எத்தனை பேர் என்னைச் சூழ இருந்தும் நான் வரவர அதிகம் உணரும் தனிமையில் இந்தச் சின்னத்தின் துணையும் இல்லாவிடில் நான் என்ன ஆவனோ? வரவர எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது? வயது காரணமாய் உடல் நைவின்மேல் போடும் பழியைத் தவிர, மனத்திலேயே ஏதோ ரஸாயனம் நேர்ந்து கொண்டிருக்கிறது. இல்லை உடல் வேறு, என்று பிரித்துப் பேசுவதுதான் தவறோ? உடல் இல்லாது மனம் ஏது?

***

கீழே கூடத்தில் ரேடியோ ஏதோ சினிமாப் பாட்டைக் கதறுகிறது. பாட்டா அது? ஆபாச ஊளை!ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் அடங்கிவிடும். ரிப்பேர் ஆகித் திரும்பி வரும்வரை ஒரு பத்து நாளேனும் நிம்மதி. ஆனால் அப்படியும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை. கம்பெனிக்காரன் பதில் ரேடியோ தருவானாமே! ஓயாத இரைச்சலில் தான் இந்த வீட்டு வாழ்க்கை. ஒன்று இரைச்சல், இல்லை மொணமொணப்பு.

மகப்பேறு ஒவ்வொன்றுக்கும் எங்கள் உறவு விரிசல் கண்டு, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கும் ஆனது. ராதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/262&oldid=1497316" இலிருந்து மீள்விக்கப்பட்டது