பக்கம்:அவள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 லா. ச. ராமாமிருதம்

இச்சமயம் ராதை என்னைப் பார்த்தால் என்ன சொல்வாள்? என்னை இடிக்க மாட்டாள்??
"இதெல்லாம் எத்தனை அனாவசியம்! தன் மனசில் தான் பெரிய புத்தன், பட்டினத்தார்னு எண்ணம்! தன் வீட்டுச் சோற்றைத் தான் சாப்பிடுவதை விட்டுவிட்டு, இதென்ன கெளரவப் பிச்சையா? வேண்டுதல் பிச்சையா?”
என்மேல் ஊர்ந்த ஆயிரம் தேள்களில் ஒன்று அவரைக் கொட்டி விட்டாற்போல் அவர் துள்ளி எழுந்தார்.
"சிவகாமி! ஆள் வந்தாச்சு, இலையைப் போடு" அவர் குரல் கணீரென்றது. வாங்க, கைகால் கழுவுங்க!”
வாழை இலையில் வட்டித்த சாதத்தின்மேல் நெய் ஊற்றிய இடம் லாந்தர் வெளிச்சத்தில் பளபளத்து என்னைப் பார்த்துச் சிரித்தது.
அந்த வற்றல் குழம்புக்கும், பருப்புத் துவையலுக்கும், கெட்டி மோருக்கும் இணை ருசி நான் இன்னும் காணப் போகிறேன்.
சாப்பாடு முடியும்வரை யாரும் பேசவில்லை.
கையலம்பிக் கொண்டதும் அவர் வெற்றிலைத் தட்டையெடுத்து வந்தார்.
"நான் போடும் வழக்கமில்லை" என்றேன்.
"பரவாயில்லை, தாம்பூலம் எடுத்துக்கோங்க."
நான் வாங்கிக் கொண்டதும் தடாலென்று இருவரும் என் காவில் விழுந்து நமஸ்கரித்தனர்.
எனக்கு வாயடைத்தது.
அந்த அம்மா பேசினாள்.
"எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுங்களா? இன்னி மாலையிலிருந்தே இவர் சொல்லிட்டிருக்காரு. "சிவகாமி! இலை போட அவசரமில்லை. விருந்தாளி வர
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/274&oldid=1497509" இலிருந்து மீள்விக்கப்பட்டது