பக்கம்:அவள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கறந்த பால்



ஸ்ரீமான் பாஸ்கரன், வழக்கப்படி, விடிவெள்ளி வேளையில் சிந்தாமணி படித்துறையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கையில், தண்ணீரில் காலடியில் கெட்டியாகத் தட்டுப்பட்டு, அதை எடுத்துப் பார்த்தால்-விக்ரஹம். அன்று வெள்ளிக்கிழமை. பாஸ்கர் புல்லரித்துப் போனார்.

வீடு திரும்பியதும், ரேணு வழக்கம்போல் அப்போது தான் காப்பியடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். அவளின் குளியல் எல்லாம், காப்பிக்கடை ஆனபின்தான்.

பாஸ்கரிடம் ஒரு விசேஷம். தன்னை எடைக்கல்லாக வைத்துக்கொண்டு, மற்றவர்களும் தன் எடையையே, அவர்களுடைய செயலில் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. கட்டாயப்படுத்துவதுமில்லை. என் அம்மா சின்ன வயதிலிருந்தே என்னை, ப்ராதஸ்னானம், சந்தியாவந்தனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று வளர்த்து விட்டால் எல்லாரும் அப்படி இருக்க முடியுமா? பல் குத்திக் கொண்டே அடுப்பு பற்ற வைக்காமலிருந்தால் சரி, அஞ்சுக்கு இரண்டு பழுதில்லையானால் வண்டியை ஒட்டு: என்று வாய்விட்டே சொல்லமாட்டார்.

அம்மா, சரியாகப் பிள்ளை தலையெடுக்கற சமயத்தில், வந்த வழி போய்ச் சேர்ந்துவிட்டாள். பாஸ்கர் அவளுக்கு ஒரு மகவு. ஆகையால் அவள் மறைந்ததும் அவர் ஒண்டிக் கட்டையாகிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/298&oldid=1497831" இலிருந்து மீள்விக்கப்பட்டது