பக்கம்:அவள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம் 333

அன்றுதான், படுக்கையினின்று எழுந்தபின் முதன் முதலாகத் தலைக்குத் தண்ணீர் விட்டது.

பிற்பகல் மணி மூன்றிருக்கும். நான் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன்.

பச்சைப் புடவை உடுத்தி, உலர வளர்த்திய கூந்தல், முழங்கால் வரை தொங்க, இன்னமும் பஞ்சடைப்பு முற்றிலும் மறையாத கண்களில் கனிந்த பார்வையுடன், ஆடி அசைந்து நடந்து என்னருகில் வந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். வெற்றிலையைக் கன்னத்தின் ஒரத்தில் அடக்கிக்கொண்டிருந்தாள். பளபளக்கச் சிவந்திருந்த உதடுகளில் புன்னகை பரவியது.

கிடந்து தேறியது முதல் அவள் வசீகரம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. பழைய முரட்டுத்தனம் தணிந்து ஒரு தனி அடக்கமும் அமைதியும் வந்திருந்தன-- கச்சேரி முடிவில், கார்வையும் மெருகேறிய குரலில் விஸ்தரிக்கும் ராகத்தின் கணிவைப்போல், நெருப்பில் நயம் துலங்கும் தங்கம்போல். -

நாங்கள் பேசவில்லை. பேச என்ன இருக்கிறது? இதயங்களில் அமைதி விளிம்பு கட்டி இருந்தது. அந்நிலையின் நிர்ச்சலனத்தினாலேயே, இந்த முத்திநிலை இப்படியே இருக்குமா என்ற சந்தேகம் உடனேயே உண்டாகி விட்டது. ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்திருந்த என் கைமேல், அவள் கை பொத்திற்று.

'குழந்தைகளா!'

அம்மா பூஜை அறையிலிருந்து கூப்பிட்டாள்.

என்ன காரணம் எங்களுக்கே தெரியவில்லை. சொல்வி வைத்தாற்போல், இருவரும் சேர்ந்தே நமஸ்கரித்தோம். அம்மா ஆசீர்வதித்தாள்.

"உட்காந்து கொள்ளுங்கள். ஒன்று சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/377&oldid=1497909" இலிருந்து மீள்விக்கப்பட்டது