பக்கம்:அவள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378லா. ச. ராமாமிருதம்



நாங்கள் பேசாது காத்திருந்தோம்- சின்னக் குழந்தைகள் போல்.

"நீங்கள் இரண்டுபேருமே ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டீர்கள். சுவாமி புண்ணியத்தில், மலைபோல் வந்தது பனிபோல் நீங்கியது. என் குழந்தை பிழைத்தது அந்தத் திருப்பதி வெங்கடாஜலபதியின் கிருபைதான் தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது? என்றைக்கும் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். சுவாமிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு எதைச் செய்தாலும் அவர் பார்த்துக்கொள்வார். நாம் இவ்வளவாவது உண்டு உடுத்து உயிர் வாழ்வதே அவரால் தான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. எப்பவும் அவனை நம்புங்கள். அவனை நம்பி வேண்டிக் கொண்டேன். இவள் பிழைத்தாள். ஆகையால் இப்பொழுது வேண்டுதலையை நிறைவேற்றிவிட வேண்டும். அவன் தன்னால் செய்யவேண்டியதைச் செய்துவிட்டான். நம்முடைய பிரார்த்தனைதான் பாக்கி. தெய்வத்திற்குச் செலுத்த வேண்டியதை முன்னைக்கு முன்னால் செய்து விட வேண்டும். அதை ஒத்திப்டோடக் கூடாது. நான் தீர்மானம் பண்ணிவிட்டேன். ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளாயிருக்கிறது. திருப்பதிக்குப் புறப்படனும். இவள் மயிரை முடியிறக்குவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்!” -

தலை சுழன்றது அம்மா இன்னும் ஏன் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போகிறாள்?

ஒரக்கண்ணால் என் பக்கத்தில் உட்காந்திருந்தவளைக் கவனித்தேன். அவள் புன்னகை உயிரற்று, அப்படியே உறைந்து போயிருந்தது. சிட்டுக்குருவி சிறகு போல் அடித்துக்கொள்ளும் இதயத்தின் பதைபதைப்பை அடக்க ஒரு கை மார்பை நாடிப்போயிருந்தது. இன்னொரு கை, குதிகால் சதையை, ரத்தம் கசிவதுகூடத் தெரியாது பிய்த்துக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/378&oldid=1497908" இலிருந்து மீள்விக்கப்பட்டது