பக்கம்:அவள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxx

 

நான் ஒன்றும் புதிதாய்ச் செய்துவிடவில்லை. இருந்தாலும் நானும் செய்கிறேன் என்கிற பிரியமும் பெருமிதமும் தான்!

உலகின் மூன்று சிறந்த நாவல்களில் ஒன்றாய்க் கருதப்படும் ANNA KARENINA வை எழுதிய இலக்கிய மேதை, தத்துவ ஞானியை பெண்ணின் மனதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததென்ன?’ என்று யாரோ கேட்டபோது, உடனேயே அவர் மிரண்டாற்போல அவசரமாய்க் கைவிரித்து "ஐயையோ எனக்கு இன்னமும் ஒன்றும் பிடிபடவில்லை" என்றாராம். அவருக்கு எதிர் நாம் எந்த மூலை?

ஆனால் இது மறுக்க முடியாதது. "அவள்” அலுப்பற்ற ஆழம் காணமுடியாத விஷயை.

ஏற்கெனவே என் கதைகளில் பெரும்பாலும், பெண்மையின் மாண்பைத்தான் சித்தரிக்கின்றன. என் பல கதைகளின் முக்கியமான பாத்திரங்களினூடே, என் தாயைத்தான் காண்கிறேன். இதற்கு அடிப்படைக் காரணமாக என் பெற்றோர்களும் என் முன்னோர்களின் பின்னணியும்தான் இருக்கக்கூடும். முந்திய பக்கங்களில் அவர்களின் விசேஷத் தன்மைகளை, இங்கு இடம் கிடைத்ததுக் கேற்பச் சொல்லியிருக்கிறேன். என் மற்றையக் கதைகளில், விவரமாகவே அவர்கள் வருகிறார்கள். 'பாற்கடல்’ எனும் சுய வரலாறில் அப்பட்டமாகவே வருகிறார்கள்.

வெகு நாட்களுக்கு முன்னர், பேச்சு வாக்கில் நண்பர் சொன்னது ஞாபகம் வருகிறது. "நம்மால் முடியாத காரியம் ஒன்றை அவர்கள் செய்கிறார்கள். அதை அவர்களால் தான் முடியும். நம்மைப் பெற்றெடுக்கிறார்கள்" தாயின் பெருமை பற்றியும், தாய்மையின் விளைவாய்க் கிளை பிரியும் எத்தனையோ உறவுகளைப் பற்றியும் சிந்திக்க-ஏன், தியானமே செய்யத்தக்க முறையில் இதை விடச் சூத்திரமாய்ச் சொல்ல முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/40&oldid=1496143" இலிருந்து மீள்விக்கப்பட்டது