பக்கம்:அவள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408 லா. ச. ராமாமிருதம்

குளம்புகள் மார்பினின்று இறங்கிவிட்டன.

என் கைகள் இருளைத் துழாவுகின்றன.

விலாவை ஒரு கையால் பிடித்தபடி எழுந்து உட்காருகிறேன். அருவி என் கைமேல் வெம்மையில் கொட்டுகிறது.

ஆனால் உயிர் போகேன்.

உயிர் போயினும் நினைவு போகேன்.

குங்கிலியத்தின் குபீர் குபீர் ஜ்வாலை கம்கம் கமகம.

உன் மூச்சு விட்டு விட்டுக் காட்டும் வெளிச்சத்தில் தொடர்கிறேன்.

கருமுகில் காட்டுக்குள் நுழையுமுன் ஒருமுறை என்னைத் திரும்பிப் பார்க்கிறாய்—நெஞ்சு பகீர்.

பளப்பள கரும் திராக்ஷைப் பெரும் விழிகள் என்னைக் கவ்வி விழுங்கித் துப்பி

அடவியுள் மறைந்து போனாய்

என் செல்வமே! என் உயிரே!

தொடர்கிறேன். கல்லில், முள்ளில் தட்டுத் தடுமாறி இடறி விழுகிறேன் எழுகிறேன் தொடர்கிறேன்.

இது கர்ப்ப இருள். ஆயினும், என் இமையுள், உன் மூச்சு அனல் கக்கிய கலிக்கத்தில் புறத்தில் கண்டதைக் காட்டிலும் பரிமாணம் பிதுங்குகிறாய்.

சதைப் பிடிப்பான தொடைகள்

நெஞ்சை அள்ளும் பிருஷ்டத்தின் மேல் வால் முளை, ஓயாத துடிப்பில் விளிக்கிறது.

என் அகத்தின் இருளே! உன் உயிரின் பிரிவே! நான் எதிர் நோக்கும் என் மரணானந்தமே! -

என்னை உன்னோடு அழைத்துச் செல்லாயோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/452&oldid=1497395" இலிருந்து மீள்விக்கப்பட்டது