பக்கம்:அவள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410 லா. ச. ராமாமிருதம்

உயிர்ச்சக்திக்குத் தோன்றிய உருவுக்கும், அது கிளைக்கும் அதிர்வுகளுக்கும் தடை கட்டச் சாத்தியமா? வடிவம் என்பதே ஒரு வடிகால்தானே!

ஆசை, பாசம், காமம், காதல், வேட்கை, பிரியம், ப்ரேமை, ராக், LOVE, Passion, கலை, தாபம், காவியம், கற்பனை, யுகம், யோகம், ஆக்கல், ஆகல், அழித்தல், அழிதல்—-உன்னுள் வெகுண்டெழும் வேகத்தின் சாயல்கள், சாயங்கள், சாயைகள்; உன் மண்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் பிம்பங்கள், இதயத்தில் புத்தியைக் கூர் தீட்டுகையில் உயிர்ச் சாணையிலிருந்து பறக்கும் பொறிகள். வடிவமே அந்தச் சாணை.

நட்ட கல்லைத் தொழுவாய், உயிர் குடிக்கும் பாம்புக்குப் புற்றில் பால் வார்ப்பாய், வடிவம் உன் இனம் தாண்டி இருக்கலாகாதா? இது மட்டும் வக்கிரமா? வக்கிரத்துக்குப் புத்தியின் இலக்கணத்தை உடைப்பில் எறி.

விண் விண் விண்—இதயத்தின் பொளியலே! என் உயிருக்குக் கண்ட புற்றே! பிரிய பாந்தவி!

மாரீச! எழுந்திரு. அம்பு பட்டு நீ விழுந்த இடத்திலிருந்து உன் மருமான் உன்னை மீட்டானா? அப்படி விவரம் இருப்பின் அதை நான் அறியேன். உனை ஒன்று கேட்கணும். எனக்கும் மான்ரோக் கண்டு இருக்கிறது. ஆனால் என் ரோகம் ஸீதையின் மோகத்தைக் காட்டிலும் மகத்தானது. என் மான் மாரீசமற்றது. ஆகவே எனைப் பீடித்திருக்கும் ஏக்கத்தின் மேல் ஆணையாக, எழு என்றால் எழு, ஆ!

மாரீச, இது உனக்கும் எனக்கும் இடையேதான். இது ராமாயணத்தில் காண முடியாது—எட்டவும் கிட்டவுமாய் அவளுக்கு நீ ஆசை காட்டினபோது ஒரு சமயமேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/454&oldid=1497400" இலிருந்து மீள்விக்கப்பட்டது