பக்கம்:அவள்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414 லா. ச. ராமாமிருதம்

இவைகள், இவர்கள் யாவுமே எனக்குத் தெரிந்தவை, தெரிந்தவர்தான். ஆனால், இவர்கள் யாவர்; இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்வி கிலேசத்தில் இல்லை, கோபத்தில் இல்லை, விரக்தியில் இல்லை, ஆனால்—ஒரு வியப்பு.

அப்படியானால், இப்போது என்னை இங்கே, எப்படிப் பிடித்துப் போட்டிருக்கிறது?

நாற்பத்திரண்டு.

அம்பாளுக்குப் பிரீதி, அவளுக்குச் சாத்தப் போவதை எண்ணுதல் ஆகாது.

சாஸ்திரமோ, வழக்கோ, அதன் வழி ஒரு நம்பிக்கை, அதன் அடிப்படை பயம், இப்படித் தடுத்தாலும் எண்ணுவது என் இச்சையில் இல்லையே! பூக்கள், தாம் பூக்கின்றன; ஆனால், அவைகளின் மலர்ச்சி என் சாதனை போல எண்ணுகிறேன்.

42, 43...

இவைகளைக் கொண்டு அவளை அலங்கரிப்பதைவிட, இவைகளைப் பறிப்பதில் ஒரு த்ரில்லே இருக்கிறது.

தேடித் தேடி...

காம்புக்கடியில் நாசூக்காக உள்ளங்கையைத் தாங்கிக் கொடுத்து, அடுத்து கொஞ்சம் நெகிழ்த்து, கட்டை விரலும், நடு விரலும் உபதேச முத்திரையில், காம்பின் மேல் நுனி சந்தித்து, 'கிள்ளினேன்’ என்றால் சொல்லின் கொடுரம் சுள்ளென்கிறது—செடியினின்று கழற்றி, எவர்வில்வர் குடலையில் போடுகிறேன் என்பதைவிட, விடுகிறேன்.

தேடித் தேடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/458&oldid=1497416" இலிருந்து மீள்விக்கப்பட்டது