பக்கம்:அவள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மா 7


இத்தனை அருமையாக நான் பிறந்தபோதிலும், அம்மாவிடம் தனிக் கொஞ்சல்கள் சலுகைகள் நான் அனுபவித்ததாக அந்தச் சின்ன வயது முதற்கொண்டே ஞாபகம் இல்லை.

- பள்ளி விட்டு வந்ததும், ஸ்லேட்டையும் புத்தகங்களையும் வீசியெறிந்துவிட்டு அம்மா மடியில் விழுந்ததாவோ,

- "அடி கண்னே! படிச்சுக் களைச்சுப் போயிட்டியா?" என்று அவள் என்னை வாரிக்கொண்டதாவோ,

- சாதத்தைப் பிசைந்து எங்களுக்கு கையில் போட்டதாவோ,

- "என்ன குழந்தையை இப்படிப் போட்டு அடிக்கறேளே! என்று எனக்குப் பரிந்துகொண்டு வந்ததாவோ,

- "நீ சமர்த்து, கெட்டிக்காரன்” என்று என்னை நேரில் பாராட்டினதாவோ,

- பிறரிடம் பெருமைப்பட்டுக் கொண்டதாவோ, ஊஹும்...

அதற்கெல்லாம் பாட்டிதான் சரி. வீட்டுக்குப் பாட்டி கட்டாயம் வேணும்.

ஆனால் அம்மா, பாட்டியான பிறகும், பாட்டியாக இல்லை. எனக்கு ஆச்சரியமாயிருக்கும், ஏமாற்றமாயிருக்கும், ஆத்திரம் வரும்.

ஆனால் -

ஆ, இது எனக்கு மிக்கப் பிடித்தமான சொல்.

சொன்ன புத்திகள், போதித்த கோட்பாடுகள், அச்சுறுத்திய கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தூக்கியெறிந்து, கலகத்துக்குக் கொடி நாட்டும் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/51&oldid=1496198" இலிருந்து மீள்விக்கப்பட்டது