பக்கம்:அவள்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500 லா. ச. ராமாமிருதம்



கலத்தின்மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக்கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் இடம் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா. கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு இன்னும் பசிக்கிறதே, ரஸம் சாப்பிட்டேனோ? மோர் சாப்பிட்டேனோ? என்று சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார். குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.

எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின. ராத்திரியானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்துவிட்டது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறதுமாய் அம்மா கை எப்படி வாஸிக்கிறது? மைஸூர்ப்பாகு கிளறும்போது கம்மென்று மணம் கூடத்தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல்கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டாலும் உங்களை நினைத்துக்கொள்வேன். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? மெளனம் ஒன்றைத் தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மெளனம் கூட ஒரு 'ஸ்டே'ஜிக்குப் பிறகு அதுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக்கொளளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும மெளனமாயிருக்கிற வயசா? நெஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக்கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக்கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியாயிருக்கிறேள்? நீங்கள் புருஷாள் உங்களுக்கு உண்மையிலேயே விரக்தியிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்னவள்தானே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசனும். எனக்குப் பேச்சு வேணும், உங்கள் துணை வேணும்... ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்து கொள்கிறேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/544&oldid=1497357" இலிருந்து மீள்விக்கப்பட்டது