பக்கம்:அவள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 லா. ச. ராமாமிருதம்

"உஷ்- down, down. ஜிம்மி, யார் சார் நீங்க? யார் உங்களுக்கு வேணும்?"

"யாரும் வேண்டாம்" என் குரலில் அழுகையே நடுங்கிற்றோ என்னவோ? "இங்கே சின்ன வயசில் தாங்கள் குடியிருந்தோம். சும்மாப் பார்க்க" -

"அப்படியா வாங்க, வாங்க!”

ஆனால் அங்கே பாக்க என்ன இருக்கிறது? அவரைப் பந்தலையும், செடிகளையும், மாட்டுக் கொட்டாயும் -

மடையா

இல்லை, நான் இந்த சமயத்துக்கு மன்னிப்புக்கு உரியவன். சில சமயங்களில் எண்ணத்தின் வார்ப்படம் எண்ணும் அவாவில் விழும் வேகத்தில், கனத்தில், காலம் கூட அதனடியில் சிக்கிக்கொண்டு அழுந்திவிடுகிறது. நேரம் என்னவோ சொற்பம்தான். ஆனால் இந்தப் ப்ரமை நிகழ்ந்தது நிகழ்ந்ததுதான். அதுவரை நாம் பாக்யவான்கள் ஆவோம்.

இடம் சாய அடியாக மாறியிருந்தது. ஒருபக்கம் சாயம் ஏற்றிய நூல்கள் கற்றை கற்றையா கொடியில் உலர்ந்துகொண்டிருந்தன. அங்கங்கே தரையில் சாயம் குட்டை குட்டையாத் தேங்கி நிரந்தரமாய்த் தங்கிவிட்ட துர்நாற்றம்.

ஆனால் அதோ என்ன?

சுவரோரத்தில் ஒரு அவரைக்கொடி, நட்டுவைத்த ஒரு கொம்பில் சுற்றிக்கொண்டு ஏறி அந்தரத்தில், துளிர் சுருண்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. தூக்கிவிட்டால், ஓட்டுக் கூரைமேல் தொற்றிக்கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/58&oldid=1496227" இலிருந்து மீள்விக்கப்பட்டது