பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிந்த உதவி நீ என்னிடம் பவ்யமாக நடந்து கொண்டாய் என்று சொல்லுவதுதான். அவன் அதிகாலையில் வந்து - செட்டியார் கொடுத்த பணம் எங்கே என்று கேட்டான். அதற்காக உன் கையில் இருநூறு ரூபாய்களைத் தந்து விட்டுப் போதிறேன்' என்று முற்றிலும் மாறியவராய் காசியப்பர் பேசினார்.

சுபத்ரா பி. ஏ. படித்த சர்டிபிகேட்டும், அவளது இண்டர்வியூ கடிதமும்தான் காசியப்பரை ஒரு தந்தை ஸ்தானத்திற்குக் கொண்டுபோய் விட்டது.

காசியப்பர் புறப்படும் போது சுபத்ரா ஒரு துண்டுச் சீட்டை அவரிடம் கொடுத்தாள். அவர் அந்தச் சீட்டை அந்த இடத்தில் பிரிக்க விரும்பாமல் வெளியேறிவிட்டார்.

சுபத்ராவின் குடும்பம் கண்ணீாில் மிதந்தது; அவளுடைய தாய், தகப்பன், சகோதரன் எல்லோருமே இருட்டறையில் அடைக்கப்பட்ட கொக்குகளைப் போல் திகிலடைந்து போய் விட்டார்கள்.

"எங்கள் சுபத்ரா மினு மினு என்று இளமைப் பூரிப்பில் மின்னிக் கொண்டிருந்தவளாயிற்றே, அவள் எந்தக் கழுகின் கையில் சிக்கினாளோ, உயிரோடுதான் இருக்கிறாளோ, இறந்துதான் போய் விட்டாளோ?' என்று இவர்கள் தினசரி புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. காசு இல்லாமல் தவிக்கும் ஹாஸ்டல் மாணவனுக்கு தெருவில் ஒரு மணிபர்ஸ் கிடைத்ததைப் போல் மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பிரித்தார்கள்.

"அன்புடையீர், வணக்கம். நான் உங்களில் யாருக்கும் அறிமுகமில்லாதவன். இருந்தாலும் நான் பிள்ளைப் பாசத்தை உணர்ந்தவன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

செல்வி சுபத்ரா திருநெல்வேலியில் கிருஷ்ணராசபுரத்தில் உள்ள ஒரு விபச்சார மாளிகையில் சிக்கிக்கொண்டு ஒற்றைச் சிறகினால் துடித்துக் கொண்டிருக்கும் பறவையைப் போல தரையில் குதித்துக் கொண்டிருக்ககிறாள். அந்த விபச்சார விடுதி ராசாக்கிளி என்ற ஒரு முரடனால் நடத்தப்பட்டு வருகிறது.

இப்படிக்கு
காசியப்பன்."