56
ஆஸ்பத்திரிக்கே வரவேண்டும். ஏன், கண்ணா, ஏதாவது தாலாட்டுத் தெரியுமா, உனக்கு?’’
“என்னத்தான் இப்படிக் கேட்கிறீர்கள். ஒரு பெண் புஷ்பவதியானவுடன் ரகசியமாக மனப்பாடம் செய்வதே தாலாட்டுத்தானே! அதுதானே ஒரு பெண்ணுக்குத் தாய் வீட்டுச் சொத்து!”
“எங்கே பாடிக்காட்டு பார்ப்போம்!” -கண்ணப்பன் புதுமாப்பிள்ளையைப் போல் கொஞ்சினன்,
அதற்கு கண்ணாத்தாள்,
ஸ்ரீரங்கம் ஆடி
திருப்பாக் கடலாடி
மாமாங்கம் ஆடி
மதுரைக் கடலாடி
சங்கு முகமாடி
சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்தி பெற்றுவந்த கண்ணே
-என்று இசைக் கூட்டிப் பாடிக்காட்டினாள்.
கோயிலூர் கண்ணப்பன் குழந்தையுடன் ஊருக்கு வந்துவிட்டான். ஊரில் ஒரே பரபரப்பு: உறவினர்கள் மத்தியில் விதவிதமான கிசுகிசுப்பு!
“கண்ணாத்தாளின் பொண்ணைப் பாத்தியா? அவ சித்தப்பனை அப்படியே உரிச்சு வச்சமாதிரிப் பொறந்திருக்கா!”
“எனக்குகூட, அந்த மாதிரித்தான் தெரியுது! பேத்தி தாத்தா மாதிரிப் பொறக்கலாம். தவறினா அம்மாவைப் பெத்த ஆயா மாதிரிப் பொறக்கலாம்! சித்தப்பன் மாதிரி பொறக்கிறது இதுதான் முதல் தடவை!”