பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

"என்ன கண்ணா இதெல்லாம்? உன் அத்தைக்குத் தெரிந்தால் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். விஷயத்தைச் சொல்லு!"

"எத்தனையோ முறை ஜாடை , மாடையாக உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இன்றைக்கு வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள்."

கண்ணாத்தாள் அடிக்கடி ஏன் கண்கலங்கி நிற்கிறாள்? இதற்காக இருக்குமோ, அதற்காக இருக்குமோ என்று குழம்பிக் கொண்டிருந்த கண்ணப்பனுக்கு அன்று தெளிவாக்ப் புரிந்து விட்டது.

“உன் மனக்குறை லேசானதில்லை கண்ணா! உன்னைப் போன்றவர்களுக்காகத்தான் 'சுவீகாரம்' என்ற முறையை நம் ஜாதிக்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள்!” என்று கண்ணப்பன், கண்ணுவுக்கு ஆறுதல் சொன்னான். சமாதானம் சொல்லும் கணவனது ஆறுதல் மொழிகள் அந்த நேரத்திற்கு வேண்டுமானால் சங்கீதமாகத் தெரியலாம். ஆனால் அதையே மனக்குறை அகற்றும் மாமருந்தாக எந்தப் பெண்ணும் எடுத்துக்கொள்வதில்லை.

கோயிலூர்

ஒரு பெண் தெய்வத்தின் ஆலயத்தைச் சுற்றி அந்த ஊர் அமைந்திருந்தது. செட்டிநாட்டில் பெரும் பாலான சிற்றுார்கள் அப்படித் தான் அமைந்திருக்கும்.

கோயிலின்முன் வாசல் மண்டபம் சித்திர, வேலைப்பாடுகள் நிறைந்த கல் தூண்களால் நிறுவப் பட்டிருந்தது. கோடைகாலமாக இருந்தாலும் சரி, மழைகாலமாக இருந்தாலும் சரி-அந்த ஊர் மக்கள் ஒய்வு நேரத்தை அந்தக் கல் மண்டபத்தில்தான் கழிப்பார்கள்.


கோயிலுக்கு எதிரே ஒரு அழகான தெப்பக்குளம். செம்மண்கலந்த சுவையான அந்த நீர்த்தடாகத்தின் நடுவே ஒரு மையமண்டபம். ஒரு பக்கத்திலே சிறிய கடை வீதி; இன்னொரு பக்கத்திலே பெரிய திறந்தவெளி மைதானம். அந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லா விட்டாலும் அருகில் வந்து பார்ப்போருக்கு அந்தப்பெண் தெய்வத்திற்கு ஏதோ ஒரு பூர்வீக வரலாறு இருப்பது போலவே தோன்றும். மற்ற இந்துக் கோயில்களில் இருப்பதுபோல இந்தக் கோயிலில் கம்பத்தடி கிடையாது. நந்தி இல்லை. கோயில் வாசல் கதவைத் திறந்ததும் மூலஸ்தானத்தைத் தரிசித்து விடலாம்,