xi
அந்த ‘சஸ்பென்ஸ்’தான் டாக்டர் ரேவதியின் கதைக்கு முன் உரையும் பின் உரையும் ஆனது; ஆகிறது!
பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டியதில்லையாமே?
அப்பால், ஞானசீலன் ஏன் அலறிக் கதறுகிறார்?-“என்னோட கண் திறந்த நேரம், நீ கண்ணை மூடிக்கிட்டீயே, ரேவதி...!”
மூச்! ...
ஞானசீலனின் ரேவதியும் ரேவதியின் ஞானசீலனும் பளிங்குத் தரையிலே ஆனந்தமாகவும் ஜோடியாகவும் பள்ளி கொண்டிருக்கிறார்கள்!-அதோ... அதோ!
தயவு செய்து அந்த அதிசயத் தம்பதியை-விசித்திரமான அந்தத் தம்பதியை யாரும் எழுப்பி விடாதீர்கள்!...
வாழ்க்கை என்பது சத்திய சோதனை!
சத்தியம் சோதிக்கும் போது-சத்தியம் சோதிக்கப் படும்போதுதான் வாழ்க்கை வாழ்க்கையாக அமையும்; அமைய முடியும்; அமையவும் வேண்டும்.
ஆம், தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் விதியும் இதுவேதான்!-விதியின் விதியும் இவ்வாறுதான் அமைந்திட வேண்டும்!
பெண் ஒரு புதிரல்லள்; அவள் ஒரு புதுமை!...
தெய்வம் ஒரு புதுமையன்று: அது ஒரு புதிர்!-மாயப் புதிர்!
குழந்தை ஒரு கனவு அல்ல; அது ஒரு வாழ்க்கை!
அன்பு ஒரு சோதனையன்று; அது ஓர் உண்மை!
சத்தியம் ஓர் ஆணையல்ல; அது ஒரு தருமம்!
இலட்சியம் ஓர் எல்லையல்ல; அது ஓர் ஆன்மா!
காதல் ஒரு விளையாட்டு இல்லை; அது ஒரு தவம்!
வாழ்வு ஒரு பிரச்னையன்று; அது ஒரு சாதனை!...