பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xi


அந்த ‘சஸ்பென்ஸ்’தான் டாக்டர் ரேவதியின் கதைக்கு முன் உரையும் பின் உரையும் ஆனது; ஆகிறது!

பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டியதில்லையாமே?

அப்பால், ஞானசீலன் ஏன் அலறிக் கதறுகிறார்?-“என்னோட கண் திறந்த நேரம், நீ கண்ணை மூடிக்கிட்டீயே, ரேவதி...!”

மூச்! ...

ஞானசீலனின் ரேவதியும் ரேவதியின் ஞானசீலனும் பளிங்குத் தரையிலே ஆனந்தமாகவும் ஜோடியாகவும் பள்ளி கொண்டிருக்கிறார்கள்!-அதோ... அதோ!

தயவு செய்து அந்த அதிசயத் தம்பதியை-விசித்திரமான அந்தத் தம்பதியை யாரும் எழுப்பி விடாதீர்கள்!...

வாழ்க்கை என்பது சத்திய சோதனை!

சத்தியம் சோதிக்கும் போது-சத்தியம் சோதிக்கப் படும்போதுதான் வாழ்க்கை வாழ்க்கையாக அமையும்; அமைய முடியும்; அமையவும் வேண்டும்.

ஆம், தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் விதியும் இதுவேதான்!-விதியின் விதியும் இவ்வாறுதான் அமைந்திட வேண்டும்!

பெண் ஒரு புதிரல்லள்; அவள் ஒரு புதுமை!...

தெய்வம் ஒரு புதுமையன்று: அது ஒரு புதிர்!-மாயப் புதிர்!

குழந்தை ஒரு கனவு அல்ல; அது ஒரு வாழ்க்கை!

அன்பு ஒரு சோதனையன்று; அது ஓர் உண்மை!

சத்தியம் ஓர் ஆணையல்ல; அது ஒரு தருமம்!

இலட்சியம் ஓர் எல்லையல்ல; அது ஓர் ஆன்மா!

காதல் ஒரு விளையாட்டு இல்லை; அது ஒரு தவம்!

வாழ்வு ஒரு பிரச்னையன்று; அது ஒரு சாதனை!...