பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. சதுரங்கம் ஆடிய மனம்!


தோ, இங்கேதான், அதாவது, விரிவடைந்திருந்த மருத்துவமனையின் விசாலமான இந்தப் பரிசோதனைக் கூடத்திலேதான் இப்பொழுது சற்றே ஓய்வாக அமர்ந்திருக்கிறாள், லேடி டாக்டர் ரேவதி.

இங்கே, காலம் சுவரிலும் ஓடியது; புள்ளிமான் வேகம். புள்ளிமான் ரேவதிக்குப் பரிபூரணமான - ஏகபோகமான உரிமை கொண்ட சுவர் ஆயிற்றே - எல்லா வித்தைகளையும் செய்யும்! மணி: ஏழு, பத்து. கொட்டாவி வந்தது.

மத்தியானம் ஓய்வெடுத்தும் கூட, உடலின் அசதி குறையாதது, உடலியல் மேதையான அவளுக்கு அதிசயமாகத் தோன்றவில்லை. மனம் எங்கே ஓய்வெடுத்தது? என்னென்னவோ சிந்தனைகள், சித்தாந்தங்கள், சலனங்கள், சிலிர்ப்புக்கள்! அம்மாடி! வாழ்க்கைதான் வேடிக்கை என்றால், மனம் அதை விடவும் வேடிக்கையாக இருக்கிறது!

பச்சை நரம்புகள் பாங்குடனே புடைத்துக் கிடந்த நெற்றியைத் தடவி விட்டுக் கொண்டாள்! “நான் இப்போ வெறும் ரேவதி கிடையாது! டாக்டர் ரேவதியாக்கும்...! ஒ, மை குட்னஸ்! ரேவதி டாக்டர் என்றால், குறிப்பாக தியாகராயநகரில் ஏக கிராக்கி!