12
அறையில் சூனியம் கை கொட்டிச் சிரிக்கவே, அவள் வெண்ணிற மேலங்கி உடுப்பை மட்டிலும் கழற்றிக் கொக்கியில் பொருத்தியவளாக, வீட்டுக்கு, ஊகூம், பங்களாவுக்குப் புறப்பட்டாள்!
கழுத்தில் இதமாகவும் இங்கிதமாகவும் ‘கம்’ மென்று கிடந்த தங்கச் சங்கிலியை ஒட்டி உரசியபடி ஊசலாடிக் கொண்டிருந்தது, நாடிக் குழல். குழலை நெருடிய வண்ணம் நடந்தாள்; அங்கங்கே பூட்ட வேண்டியவற்றையெல்லாம் அவள் கைப்படவே பூட்டினாள். உடைமைகளை முறையோடும் முறையாகவும் பேணிக் காப்பதில் அவள் அந்நாளிலிருந்தே ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து வருகிறாள்.
வெளியே வெளிச்சம் கண் சிமிட்டியது.
வாசல் வெளிக்கு வந்தாள், ரேவதி! ‘பிப்ரவரி நாலில் என் பிரச்சினையெல்லாம் தீர்ந்திடும்!’ பரீட்சை நாள் நெருங்குகிறதே?
மீனாட்சிக் குங்குமத்தின் லெட்சுமிமயமான ரத்தச் சிவப்போடு புத்தெழில் துள்ளத் தயாராகக் காத்திருந்தது, ‘மாருதி’.
“கீதா, நான் புறப்படட்டுமா?... மாதவியும் கண்ணகியும் எட்டு மணி ஷிப்டுக்கு வந்ததும், அவங்க ரெண்டு பேரும் நோயாளிங்களைக் கவனிச்சுப்பாங்க. அதுக்குள்ளே, நீ அந்த டெலிவரி கேஸை உஷாராப் பார்த்துக்கணுமாக்கும்! அவங்க வந்தானதும் நேரத்தோட நீ வீட்டுக்குப் போயிடம்மா!’
“குட்நைட், டாக்டர்!”
“குட்நைட்!”
ரேவதியின் விழிகள் உயர்கின்றன.
பெயர்ப் பலகையில், ‘டாக்டர் ரேவதி எம். எஸ்., எம். பி. பி. எஸ்., டி. ஜி. ஓ., எப். ஆர். ஸி. எஸ்., எப்.ஐ.ஸி.எஸ்., எப். ஏ. ஸி. எஸ்.’ ஆகிய எழுத்துக்கள் விதியின் எழுத்துக்களைப் போலே சிரிக்கின்றன!
‘மாருதி’ புறப்பட்டது.