37
அடிமனம் பொங்கிக் கொண்டு வந்தது. திறந்த கண்களை மூடினாள். மூடின கண்களைத் திறந்தாள்!
விம்மினாள். விழிகளும் விம்மின.
விம்மல் வெடித்து நெஞ்செங்கும் பரவியதை உணர்ந்ததுதான் தாமதம்; அவளுக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது!
“நானா இப்ப விம்மினேன்? சே!... கேடு கெட்ட தாழ்வு மனப்பான்மை நோய் என்னையும் தொற்றிக்கிடுச்சா? இருக்காது; இருக்கவும் முடியாது; இருக்கவும் கூடாதாக்கும்! நான் சாதாரண ரேவதியா? என்ன! நான் டாக்டர் ரேவதி இல்லையா?” அவள் இப்போது சிரிக்கிறாள்.
ராஜதந்திரத்தோடு விதிக்குச் சவால் விடும் ராஜரிகமான சிரிப்பு அது!
வானொலி பாடுகிறது.
என்னவோ ஒரு பாட்டு.
என்னவோ ஒரு ராகம்.
பாட்டும் ராகமும் நிறுத்தப்பட்டன.
ரேவதிக்கு இப்போது உண்மையான அமைதி வேண்டுமாம்!
“இந்த ஞானசீலன் அன்றைக்குத் தன்னை மறந்ததோட, என்னையும் மறந்து அப்படி ஒரு பாவத்தையும் அநியாயத்தையும் திமிரெடுத்துச் செய்யாமல் இருந்திருந்தால்... என்ன என்னவோ நடந்திடுச்சு! எல்லாமும் முடிஞ்சு போச்சு!... நான் தனி மரம் ஆனதுதான் கண்ட பலன்! ...
இன்று ஏன் மனக்குரங்கு இப்படித் தாவிக் குதிக்கிறது?