பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii


அலகிலா விளையாட்டுடைய அப்பனே அம்மையப்பன் ஆகிப் பெண்மைக்கு வாழ்த்துரைத்து அனைத்து உலகிற்கும் முன் உரிமை பெற்ற முன் உதாரணம் ஆனான்!

அந்த அறநெறிமுறை மரபினில் உதித்த பாரதி, பாரதத் தமிழ்ச் சமுதாயத்தில், உயிரினைக் காத்து உயிரினைச் சேர்த்து உயிரினுக்கு உயிராய் இன்பமாகி, உயிரினும் ‘பெண்மை’ இனிக்கக் கண்டதில் வியப்பில்லைதான்!

அந்தப் பெண்மைக்குச் சத்தியத்தின் தருமமாகவும் தருமத்தின் உண்மையாகவும், உண்மையின் சத்தியமாகவும் விளங்குகிறாள் ரேவதி-டாக்டர் ரேவதி! அவள் சுந்தரக்கிளி மாத்திரமல்லள்; சுதந்திரக் குயிலும் கூட!

ர் அதிசயம்!

டாக்டர் ரேவதிக்கு மணமகன் தேவையாம்!

செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பேசின!

ரேவதியின் மருத்துவமனையில் தோழிமார்கள் இருவர் ரேவதியை-ஊகூம், டாக்டர் ரேவதியை விமரிசனம் செய்கின்றனர்.

மஞ்சுளாவுக்கு டாக்டர் ரேவதியைப் பிடிக்காது.

ஆனால், பிருந்தாவுக்கு டாக்டர் ரேவதியென்றால், நிரம்பியதோர் ஈடுபாடு! அவள் சொல்லுவாள்: “டாக்டர் ரேவதின்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்; எப்படியாவது அவங்க திருமணம் நடக்கட்டும்! ரேவதி அம்மாவோட மனப்போக்கே தனி; தனித்தன்மையானது. அதைப் புரிஞ்சுக்கிடாதவங்க, ‘டாக்டர் ரேவதி அகம்பாவம் பிடிச்சவங்க’ அப்படின்னு சொல்லுவாங்க! நான் அறிஞ்சவரை, ரேவதி-டாக்டர் ரேவதி அன்புக்கு ரொம்ப ரொம்பக் கட்டுப்படுறவங்க! எதிலேயும் எப்பவுமே ஒரு நியாயம் வேணும்னு நினைக்கிறதும் நம்புறதும் எதிர்பார்க்கிறதும் தப்பா?”

தோழி பிருந்தாவின் இதய ஒலிக்கு இதய ஒளி ஆனவள்தான் ரேவதி-டாக்டர் ரேவதி!